அகமதாபாத் : பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியின் பிம்பத்தை உடைக்கும் வகையில் பேசி இருக்கிறார் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
பாகிஸ்தான் அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அவர் தான் தற்போது உள்ள வேகப் பந்துவீச்சாளர்களில் சிறந்தவர் என்றெல்லாம் சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால், அவர் ஆசிய கோப்பை தொடரிலும், தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் வீழ்த்துவதும் இல்லை. ரன்களை கட்டுப்படுத்தும் திறனும் போட்டிக்கு, போட்டி மாறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பும் ஷஹீன் ஷா அப்ரிடி இந்திய அணியை சாய்க்கப் போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், அந்தப் போட்டியில் அவர் 6 ஓவர்கள் பந்து வீசி 36 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
இந்த நிலையில், ஷஹீன் ஷா அப்ரிடி குறித்து போட்டிக்கு பின் பேசிய ரவி சாஸ்திரி, "அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர், அவர் புதிய பந்தில் விக்கெட்டைப் பெற முடியும். ஆனால், மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா ஆடவில்லை என்றால், பாகிஸ்தானின் பந்து வீச்சு பலம் குறைவுதான். பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சின் தரமும் சராசரிதான். ஷஹீன் ஷா, வாசிம் அக்ரம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர், ஆனால் அவரையும் நாம் பெரிதாக உயர்த்திப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வீரர் வெறுமனே நல்ல வீரராக இருந்தால், அவர் ஒரு நல்ல வீரர் என்று சொல்வதோடு நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் ஒரு ஆகச் சிறந்த வீரர் எல்லாம் இல்லை. அதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்," என்று கூறினார்.
இதன் மூலம், ஷஹீன் ஷா அப்ரிடிக்கு, வாசிம் அக்ரம் அளவுக்கு பிம்பத்தை கட்டமைக்கும் வேலையை செய்ய வேண்டாம் என கூறி இருக்கிறார் ரவி சாஸ்திரி.