டெல்லி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஷர்துல் தாக்குர்.
அதுவும் சிக்ஸருக்கு போன பந்தை லாவகமாக கேட்ச்சாக மாற்றி எல்லோரையும் அசர வைத்தார் தாக்குர்.

அதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை பல ரசிகர்கள் அவரை சமூக ஊடகங்களில் வசை பாடி வந்தனர். ஆனால், பந்துவீச்சில் இல்லாவிட்டாலும் பீல்டிங்கில் அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார்,
ஏன் ஷர்துல் தாக்குரை வசை பாடினார்கள்?
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஸ்பின்னர் அஸ்வின் நீக்கப்பட்டு, மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என கூறப்பட்டது.
ஆனால், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் தவிர அந்த மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக முகமது ஷமி ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஷர்துல் தாக்குர் அதிக ரன்களை வாரி வழங்குவார் என்பதால் சில ரசிகர்கள் அவரை வெறுத்து வருகின்றனர். அவருக்கு "லார்ட் ஷர்துல் தாக்குர்" என பெயரும் வைத்துள்ளனர்.
அதற்கு பின்னர் ஷர்துல் தாக்குர் பந்து வீச வந்தார். அவரது முதல் ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார் ஆப்கன் வீரர் குர்பாஸ். தனது இரண்டாவது ஓவரில் ஒரு நோ பால் வீசி, அடுத்த ஃப்ரீ ஹிட் பந்தில் வைடு வீசி சோதித்தார் தாக்குர். அப்போது தான் ரசிகர்கள் அவரை வசை பாடத் துவங்கினர்.
ஆனால், அதற்கு அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் குர்பாஸ் சிக்ஸ் அடித்த ஆசைப்பட்டார். அது பவுண்டரி எல்லைக்கு மேலேயே சென்று விட்டது. ஆனால், ஷர்துல் தாக்குர் ஓடி வந்து பந்தை கேட்ச் பிடித்து பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் முன் பந்தை மேலே தூக்கி வீசினார். பின் மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்தார்.
32 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தும் அதிரடி ஆட்டம் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 63 ரன்களுக்கு தாக்குர் பிடித்த அபாரமான கேட்ச்சால் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அதன் பின் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே தாக்குர் தன் பந்து வீச்சில் விக்கெட் எடுத்தார். எப்படியோ ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து தப்பினார்.