புனே : இந்திய அணியில் நீண்ட போராட்டத்துக்கு பின் இடம் பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் அடிப்படை தவறு ஒன்றை செய்து வருகிறார்.
ஒவ்வொரு போட்டியிலும் தவறான ஷாட் ஆடி தன் விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே தவறை செய்ததாலேயே அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்தது.

2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக காயத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெற்றார். ஆனால், அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
உலகக்கோப்பைக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் சதம் அடித்து உலகக்கோப்பை அணியில் தன் இடத்தை உறுதி செய்தார். உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் டக் அவுட் ஆனாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று நம்பிக்கை அளித்தார்.
ஆனால், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அவர் 19 ரன்களை எடுத்த நிலையில் தவறான ஷாட் ஆடி தன் விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் என்ன சிக்கல் என்றால் இந்திய அணியில் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே நிலையற்ற ஃபார்மில் இருக்கிறார்.

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல் என் அனைவரும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கை வகித்து இருக்கின்றனர். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடும் வேலையை மட்டுமே இதுவரை செய்துள்ளார். அப்படி இருந்தும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆட்டமிழந்த விதம் விமர்சனத்தை எழுப்பி உள்ளது.
இந்திய அணியில் இடம் பெற சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் என பல வீரர்கள் காத்திருக்கும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் சில போட்டிகளிலாவது விக்கெட்டை பறி கொடுக்காமல், போட்டியை தானே முன்னின்று வெற்றி பெற்றுத் தந்து தன்னை நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் இந்த உலகக்கோப்பை தொடரே அவருக்கு இந்திய அணியில் கடைசி வாய்ப்பாக அமையும்