டெல்லி : இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்படலாம் என்று ஒரு தகவல் வலம் வரும் நிலையில், அதற்கு நேர் மாறான மனநிலையில் இந்திய அணி நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் துவக்க வீரராக சுப்மன் கில் தன்னை நிரூபித்து இருந்தார். அணியின் நிரந்தர வீரராக அறியப்பட்டார்.

2023 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் மற்ற மூத்த இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலியை விட அதிக ரன்கள் குவிப்பார் என்றெல்லாம் பலரும் கூறி வந்தனர்.
ஆனால், உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் போட்டிக்கு முன்னதாகவே டெங்கு காய்ச்சலால் ஓய்வில் இருக்கிறார். உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை அவர் பங்கேற்கவில்லை.
அவர் குணமாக குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் என் கூறப்பட்டது. அதன் பின்னும் அவர் போட்டிகளில் ஆட தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அதனால் அவருக்கு பதிலாக வேறு மாற்று வீரரை அணியில் தேர்வு செய்ய ஒரு திட்டம் ஆலோசனை செய்யப்பட்டது.
ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த திட்டத்தை இந்திய அணி கைவிட்டுள்ளதாக தற்போது பிசிசிஐ அதிகாரி ஒருவர் கிரிக்கெட்நெக்ஸ்ட் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், ஆஸ்திரேலிய அணி தான் எனவும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக காயத்தில் சிக்கினார். அதனால், அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு மாற்று வீரருடன் அந்த அணி களமிறங்கும் என எதிர்பார்த்த நிலையில், அவரை அணியில் இருந்து இன்னும் நீக்காமல் வைத்துள்ளது ஆஸ்திரேலியா.
அதற்கு முக்கிய காரணம், ட்ராவிஸ் ஹெட் மீது ஆஸ்திரேலிய அணி வைத்திருக்கும் நம்பிக்கை தான். அவர் எப்போது அணிக்கு திரும்பினாலும் அது அணிக்கு பெரிய அளவில் பலனளிக்கும் என்று அந்த அணி நம்புகிறது.
அதே போல, ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்பு அளித்த பேட்டியில் சுப்மன் கில் உடல்நிலை தான் எங்களுக்கு முக்கியம். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று தான் கூறி இருந்தார். அவரை அணியில் இருந்து நீக்குவது குறித்து அவர் பேசவே இல்லை.
சுப்மன் கில் அணிக்கு தேவை என்பதில் உறுதியாக இருப்பதாலும், ஆஸ்திரேலியா அணி போல தங்கள் அணியின் வீரர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதால் தான் கேப்டன் ரோஹித் சர்மா அப்படி பேசி இருக்கிறார்.
மறுபுறம் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில், அவர் விரைவாக குணமடைந்து வருகிறார். அவர் பார்க்க நன்றாக இருக்கிறார். விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் தெரிவித்தார்.