பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 41வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் இலங்கை அணியும் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கு மறைமுக உதவியை கொடுக்கும்.
இதனால் இந்த போட்டியை பாகிஸ்தான் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். இலங்கை அணி தங்களுக்கு உதவி செய்யும் என எதிர்பார்த்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இன்று மிகப்பெரிய ஏமாற்றுமே அமைந்திருக்கிறது.

ஏனென்றால் பேட்டிங் என்றால் என்னவென்றே தெரியாது என்பது போல் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள். பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய நிஷாங்கா இரண்டு ரன்களிலும், கேப்டன் குசல் மெண்டிஸ் ஆறு ரன்களிலும், சமர விக்ரமா ஒரு ரன்னிலும், அசலங்கா 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனால் இலங்கை அணி 70 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குசல் பெரேரா 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். குசல் பெரேரா தனி ஆளாக நின்று இலங்கை அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து கடந்த போட்டியில் டைம் அவுட்டான ஏஞ்சலோ மேத்யூஸ் இன்றைய ஆட்டத்தில் வெறும் 16 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று தனஜெய டி சில்வா 19 ரன்களிலும், கருணரத்னே 6 ரன்களும் எடுக்க இறுதியில் தீக்சனா மட்டும் போராடி 91 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 46 புள்ளி 4 ஓவரில் 171 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து பேட்டிங் பிட்சில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது.

நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் ட்ரெண்ட் பவுல்ட் மூன்று விக்கெட்டுகளையும் லோகி பெகுர்சன் மற்றும் மிட்செல் சாண்டினர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த இலக்கை நியூசிலாந்து அணி எவ்வளவு வேகமாக துரத்துகிறார்களோ அவ்வளவும் அவருடைய ரன் ரேட்டிற்கு சாதகமாக அமையும்.