மும்பை : இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் வருங்கால இந்திய அணியின் கேப்டனாக ஆக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய ஒருநாள் அணியில் நிலையான இடம் இன்றி மாற்று வீரராக மட்டுமே இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். ஆனால், டி20 அணியில் முதன்மை வீரராக இருக்கிறார். உலக அளவில் சர்வதேச டி20 போட்டியில் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
இந்த நிலையில், 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முடிந்த பின் நடக்க உள்ள ஆஸ்திரேலிய டி20 தொடரில் அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்க உள்ளது பிசிசிஐ. அந்த டி20 தொடரில் தற்போது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பெரும்பாலான வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் 2023 உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே ஆடி உள்ளார். அதனால், அவரை டி20 தொடரில் ஆட வைப்பதோடு கேப்டன் பொறுப்பை வழங்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகக்கோப்பை முடிந்த உடன் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடரின் போது ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம் பெற மாட்டார்கள்.
அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் பங்கேற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெயிக்வாட், வாஷிங்க்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான அணியில் இடம் பெறுவார்கள். இந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார்.
ஒருவேளை இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை வெற்றி பெற வைத்தால் சூர்யகுமார் யாதவ் வருங்காலத்தில் டி20 அணியின் நிரந்தர கேப்டனாக மாறும் வாய்ப்பும் உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் இன்னும் சில ஆண்டுகளே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார்கள் என கூறப்படும் நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு இது பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.