லக்னோ : இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக மோத உள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் ஆடுவது கிட்டத்தட்ட உறுதி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பாண்டியா நீக்கப்பட்டு, பேட்டிங்கில் அவருக்கு இணையான அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பினால், சூர்யகுமார் யாதவ் வாய்ப்பு பறிபோகும் என்பதே அப்போதைய நிலைமை. நியூசிலாந்து போட்டியில் தனக்கு கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பில் சூர்யகுமார் யாதவ் என்ன செய்யப் போகிறார் என பலரும் எதிர்பார்த்தனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் சேஸிங்கின் போது பேட்டிங் ஆட வந்தார். ஆனால், 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஓடி வருவதை பார்க்காமல் பந்தை பார்த்துக் கொண்டு இருந்ததால், அவர் ரன் அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே, வாய்ப்பே இல்லாமல் இந்திய அணியில் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்த சூர்யகுமார் யாதவ் தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக காயத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவார் என்ற தகவல்கள் முதலில் வெளியானது. அதனால், இனி சூர்யகுமார் யாதவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என கருதப்பட்டது.
ஆனால், தற்போது வந்துள்ள செய்தியின் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா காயம் குணமடைந்தாலும் அவரால் முழு வீச்சில் பந்து வீச முடியுமா என சந்தேகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கு அவர் சிறிது காலம் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அப்போது அவருக்கு மீண்டும் ஏற்கனவே காயம் இருந்த இடத்தில் வலி ஏற்படாமல் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு பாண்டியவிற்கு மீண்டும் ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் டிராவிட் கூட்டணி.
அதனால், பாண்டியாவிற்கு பதில் சூர்யகுமார் யாதவ்வை அணியில் ஆட வைக்க கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.