மும்பை : இந்திய அணியின் முன்னணி விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் இருவரையும் சேர்த்து வைத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத்.
2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறாத நிலையில், அதற்கு கேப்டன் பாபர் அசாம் தான் காரணம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆகிப் ஜாவேத் இது பற்றி பேசுகையில் பாபர் அசாம் பற்றி எதுவும் பேசக் கூடாது, விமர்சனம் செய்யக் கூடாது என்கிறார்கள். அவர் நல்ல கேப்டன் என்கிறார்கள். ஆனால் அவர் ஏதாவது வென்று கொடுத்து இருக்கிறாரா? விராட் கோலி நீண்ட காலம் கேப்டனாக இருந்தார். அவர் ஏதாவது கோப்பை வென்று கொடுத்து இருக்கிறரா? என விமர்சனத்தை முன் வைத்தார்.
விராட் கோலி 2017இல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021 டி20 உலகக்கோப்பை என வரிசையாக பெரிய தொடர்களில் இந்தியா கோப்பை வெல்லாமல் கடைசி கட்டத்தில் தோல்வி அடைந்தது.
அதே போல, ஐபிஎல் தொடரில் கூட விராட் கோலி கேப்டனாக நீண்ட காலம் இருந்தும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பை வென்றதில்லை. ஆனால், ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை கோப்பை வென்றார். அதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவியை அளித்தது பிசிசிஐ.
விராட் கோலி, பாபர் அசாம் இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் தான். ஆனால், நல்ல கேப்டன்கள் இல்லை என்பதை சுட்டிக் காட்டி பாபர் அசாமின் கேப்டன் பதவியையும் பறிக்க வேண்டும் என ஜாவேத் கூறி இருக்கிறார்.
ஆகிப் ஜாவேத், "கேப்டன்களை நாம் உருவாக்க முடியாது. விராட் கோலி கேப்டன் ஆனார். 2019 உலகக்கோப்பைக்கு பின் மிக்க நன்றி, நீங்கள் பெரிய சூப்பர்ஸ்டார் தான். ஆனால் வீட்டுக்கு செல்லுங்கள் என அவரை அனுப்பி விட்டார்கள். அவர்கள் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தார்கள்." என்றார்.
மேலும், "ரோஹித் ஏன் நல்ல கேப்டன் என்றால் அவர் ஐந்து முறை ஐபிஎல் பட்டம் வென்று கொடுத்துள்ளார். ஆனால், விராட் கோலி, ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பைகளில் கோப்பை வெல்லவில்லை. அதை பாபர் அசாம் உடன் ஒப்பிட்டு பாருங்கள். அவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கோப்பை வெல்லவில்லை. ஆனாலும், மக்கள் அவர் நல்ல கேப்டன் என்கிறார்கள். அதை அவர் எங்கே வெளிப்படுத்தி இருக்கிறார்?" என கேள்வி எழுப்பினார் ஜாவேத்.