பெங்களூர் : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தன் 50வது சதத்தை அடிக்க அவருக்காக என ஒரு போட்டி மட்டுமே உலகக்கோப்பை லீக் சுற்றில் மீதமுள்ளது.
இந்திய அணி லீக் சுற்றில் இதுவரை எட்டு போட்டிகளில் ஆடி அனைத்திலும் அபாரமான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அடுத்து தன் கடைசி லீக் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா ஆட உள்ளது. இந்தியா ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்து விட்டது. அரை இறுதிக்கு செல்வதும் உறுதியாகி விட்டது.
இந்த நிலையில், நெதர்லாந்து அணி கத்துக்குட்டி அணி என்பதால் இந்திய அணி இந்தப் போட்டியிலும் எளிதாக வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது விராட் கோலிக்கு ஒரு அரிய வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

விராட் கோலி கடைசியாக ஆடிய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து ஒருநாள் போட்டிகளில் தன் 49வது சதத்தை நிறைவு செய்தார். அத்துடன் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் போட்டி சதம் அடித்த சாதனையை கோலி சமன் செய்தார்.
அவர் உலகக்கோப்பை தொடரில் இரண்டு சதங்கள் அடித்து இருக்கும் நிலையில், அந்த இரண்டு போட்டிகளின் போதும் அவர் சதம் அடிப்பதற்காக பந்துகளை கடைசி ஓவர்களில் வீணடித்தார் என்ற புகார் எழுந்தது. எனினும், இந்திய அணி மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் கோலி அப்படி செய்யவில்லை என அவருக்கு ஆதரவாக பேசினர்.
இந்த நிலையில்,. விராட் கோலி உலகக்கோப்பை தொடர் முடிவதற்குள் தன் 50வது ஒருநாள் போட்டி சதம் அடித்து சச்சின் சாதனையை முறியடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இந்திய அணிக்கு லீக் சுற்றில் ஒரு போட்டியும், அரை இறுதிப் போட்டியும் மீதமுள்ளன. அரை இறுதியில் வென்றால் இறுதிப் போட்டியிலும் இந்தியா பங்கேற்கும்.
இந்திய அணிக்கு அதிகபட்சம் மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இந்த உலகக்கோப்பை தொடரை விட்டால் இனி இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் குறைந்த அளவிலேயே பங்கேற்கும். இந்த மூன்று உலகக்கோப்பை போட்டிகளில் லீக் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே விராட் கோலி தனக்காக சில ஓவர்களை எடுத்துக் கொண்டு ஆடி சதம் அடிக்க முடியும். அப்படி செய்தாலும் பெரிய அளவில் விமர்சனம் எழாது.
ஆனால், அரை இறுதி, இறுதிப் போட்டிகளில் கோலி சதம் அடிப்பது என்பது போட்டியின் சூழ்நிலையில் இயல்பாக அமைந்தால் மட்டுமே சாத்தியம். அப்போது கோலி சதத்தை நெருங்கும் போது ஒரு ஓவர் மெதுவாக ஆடினால் கூட பலத்த விமர்சனம் எழும். எனவே, கோலி தனக்காக சதம் அடிக்க நெதர்லாந்து போட்டி மட்டுமே மீதமுள்ளது.
அரை இறுதி, இறுதிப் போட்டிகளில் கோலி அந்த ரிஸ்க்கை எடுக்க முடியாது. எனவே, விராட் கோலி நெதர்லாந்து போட்டியில் சதம் அடித்தே ஆக வேண்டும். அந்தப் போட்டி அன்று தீபாவளி பண்டிகையும் வருகிறது. அத்துடன் கோலியின் மனைவி, அனுஷ்கா சர்மாவும் இந்தப் போட்டியை காண நேரில் வந்து கோலியுடனே தங்கி இருக்கிறார். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது கோலி தன் 50வது சதத்துக்கு தயார் ஆகிக் கொண்டு இருக்கிறார் என்றே தோன்றுகிறது.