டெல்லி : 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு பெரிய கேள்விக் குறியாகி இருக்கும் நிலையில், வீரேந்தர் சேவாக் அந்த அணியை மோசமாக கேலி செய்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணி தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் 8 லீக் போட்டிகளில் ஆடி 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே மீதமுள்ளது.
பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்ல வேண்டும் வென்றால் தன் கடைசி லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து பெரிய அளவில் ரன் குவித்து இங்கிலாந்து அணியை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இது நடக்காது என பலரும் கூறி வருகின்றனர்.

இதனிடையே பாகிஸ்தான் அணி வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் ஆட இந்தியா வந்தது முதல் பிரியாணி சாப்பிடுவதிலும், பெரிய ரெஸ்டாரன்ட்களுக்கு சென்று வகை வகையான அசைவ உணவுகளை உண்பதிலும், ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து தங்கள் அறைக்கே உணவுகளை பெற்று, அணியின் உணவுக் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டதையும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, பாகிஸ்தான் அணி இந்தியா வந்ததும் முதலில் ஹைதராபாத் நகரத்தில் தான் முதல் இரண்டு வாரங்கள் தங்கி போட்டிகளில் பங்கேற்றனர். அங்கே ஹைதராபாத் நகரம் பிரியாணி மற்றும் வித விதமான அசைவ உணவுகளுக்கு பெயர் போனது என்பதால் பாகிஸ்தான் வீரர்கள் அங்கே தொடர்ந்து ஹோட்டல்களுக்கு சென்றது பெரிய செய்தி ஆனது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் தன் பங்கிற்கு, "பிரியாணி சாப்பிட்டாச்சா அப்புறம் என்ன ஊருக்கு கிளம்புங்க.." என பாகிஸ்தான் அணியை கேலி செய்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். சேவாக் தனது பதிவில் "பாகிஸ்தான் வாழ்க. அவ்வளவு தான். பிரியாணி மற்றும் எங்கள் உபசரிப்பு நன்றாக இருந்தது என நம்புகிறோம். உங்கள் நாட்டுக்கு பாதுகாப்பாக விமானம் ஏறி செல்லுங்கள்" என கூறி இருக்கிறார்.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறாது என முடிவே செய்து சேவாக் இவ்வாறு பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்து இருக்கிறார்.