டெல்லி : 2023 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தன் ஏழாவது உலகக்கோப்பை சதத்தை அடித்து இருந்தார்.
அதன் மூலம் ரோஹித் சர்மா உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.

இந்த நிலையில், அது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன், ரோஹித் சர்மா எங்கே இருந்து இந்த பயணத்தை தொடங்கி, இப்போது இந்த சாதனையை வந்து அடைந்து இருக்கிறார் எனக் கூறி பாராட்டி இருக்கிறார்.
2011இல் ரோஹித் சர்மா தனக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என சோகமாக போட்ட ட்விட்டர் பதிவு ஒன்றை காட்டி, விவிஎஸ் லக்ஷ்மன் தனது பாராட்டை கூறி இருந்தார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது அதில் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. அவரை விட ஜூனியரான விராட் கோலி பெயர் கூட அணியில் இருந்தது.
இத்தனைக்கும் 2008ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார் ரோஹித் சர்மா. அப்போது அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருந்தார். தனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற சோகத்தில் அவர் ட்வீட் ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.

அந்த பதிவில், உலகக்கோப்பை அணியில் இடம் பெறவில்லை என மிக மிக ஏமாற்றம் அடைந்துள்ளேன். இதில் இருந்து நான் மீண்டு வர வேண்டும். ஆனால், உண்மையில் இது எனக்கு பெரிய பின்னடைவு என கூறி இருக்கிறார் ரோஹித் சர்மா.
அந்த பதிவை தற்போது எடுத்துக் காட்டிய விவிஎஸ் லக்ஷ்மன், "2011இல் இந்த நிலையில் இருந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். 2 உலகக்கோப்பை தொடர்கள் (2015, 2019) மற்றும் 2 உலகக்கோப்பை போட்டிகளில் (2023 உலகக்கோப்பையின் முதல் இரண்டு போட்டிகள்) 7 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் எப்போதும் முயற்சியை கை விடக் கூடாது. சாம்பியன்ஸ் தங்கள் கனவை நிறைவேற்றும் வழியை தேடிக் கொள்வார்கள்" எனக் கூறி ரோஹித் சர்மாவை பாராட்டி இருக்கிறார்.