லக்னோ : பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்திய அணிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயத்தால் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கவில்லை.
ஆனால், அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பார் என முதலில் கூறப்பட்டது. தற்போது காயம் குணமடைந்தாலும் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா? அவர் போட்டியில் ஆடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் உள்ளது.
இந்த நிலையில் அனுபவ வேகப் பந்துவீச்சாளரான பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், பாண்டியாவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்தது போல தெரிந்தாலும், அவரை இங்கிலாந்து போட்டியில் ஆட வைத்தால் பெரிய சிக்கல் வரும் என கூறி உள்ளார். அவர் அப்படி சொல்லக் காரணம், பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதுதான். அந்த மாதிரியான காயம் வந்து குணமானாலும், அவரால் வேகப் பந்து வீசுவதில் சிக்கல் இருக்கும். அதே சமயம், பேட்டிங் செய்வதில் பெரிய சிக்கல் இருக்காது. ரன் ஓடும் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்திய அணியில் பாண்டியாவின் வேகப் பந்துவீச்சை ஈடுகட்டும் வகையில் ஷமி நியூசிலாந்து போட்டியில் சேர்க்கப்பட்டார். அந்தப் போட்டியில் அவர் 5 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார். அதனால், ஷமியை இங்கிலாந்து போட்டியிலும் ஆட வைத்து, பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார் வாசிம் அக்ரம்.
"இந்திய அணி பாண்டியா இல்லாமலேயே நன்றாக இருக்கிறது. அவர் உடற்தகுதி பெற்றால் நல்லது. ஆனால், ஷமியை நீக்குவது மிகவும் கடினம். என்னைப் பொறுத்தவரை பாண்டியாவை வைத்து ரிஸ்க் எடுக்கக் கூடாது. ஏனெனில், தசைப் பிடிப்பு அல்லது எலும்பில் காயம் ஏற்பட்டால், முதலில் காயம் குணமானது போல தோன்றினாலும், போட்டியின் போது அங்கே மீண்டும் தசையை இழுத்துக் கொண்டு காயத்தை பெரிதாக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பாண்டியா 100 சதவீதம் குணமான பின் அவரை ஆட வைக்கலாம். இந்திய அணியை பாராட்டியே ஆக வேண்டும். எப்போது ஒரு வீரர் அணிக்கு வந்தாலும் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்" என்றார் வாசிம் அக்ரம்.