கொழும்பு : ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு இருந்த அணி, தற்போது சின்ன பசங்க வடு எல்லாம் அடி வாங்குகிறது. ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டி, டி20 சாம்பியன், டெஸ்ட் கிரிக்கெட்டில் கிங் போன்ற பல சாதனைகளை இலங்கை படைத்திருக்கிறது.

இந்த நிலையில், இலங்கை அணி மீண்டு வர என்ன வழி என்பதை தற்போது பார்க்கலாம். இது குறித்து கிரிக்கெட் விமர்சகர்களிடம் கேட்டோம். அதில், அவர்கள் கூறியது, விராட் கோலியைச் சர்ச்சைக்குரிய முறையில் கேப்டன்சி பதவியில் இருந்து நகர்த்திய பிறகு, ஏற்பட்ட குழப்ப சூழ்நிலையில் இருந்து, இந்திய அணியை இந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கு ஒரு வருடம் மேலாகி இருக்கிறது.ஒரு அணி உருவாக்கத்திற்கான எல்லா அடிப்படைகளும் இருந்தாலும் கூட, மனரீதியாக வீரர்களைக் ஒன்றிணைத்து, ஒரே குறிக்கோள், ஒரே அணுகுமுறைக்குள் கொண்டுவர காலம் தேவைப்பட்டது.
இப்படி இருக்கும் பொழுது இலங்கை கிரிக்கெட் அணியை பழைய முறைக்கு ஒரே இரவில் திரும்பி விட முடியாது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் சரியானவர்களை கொண்டு வருவது, இலங்கையின் எல்லாப் பகுதிகளில் இருந்தும், வீரர்களை உள்வாங்குவது மட்டுமில்லாமல், உருவாக்குவதற்கான சுமுக சூழலை ஏற்படுத்துவது என்று அடிப்படையான வேலைகளைச் செய்ய வேண்டியது இருக்கிறது.
இலங்கையில் சிங்களர்கள் தவிர்த்து மற்றவர்கள் யார் பெரிதாக கிரிக்கெட்டை நாடுகிறார்கள், பிறகு எப்படி அணிக்குள் வர முடியும் என்பதான வாதத்தையும் முன் வைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் தேசிய அணியில் யாருக்கும் இடம் உண்டு என்கின்ற சூழலை உருவாக்கினால்தான், கிரிக்கெட்டை நோக்கி பெற்றவர்களும் பிள்ளைகளை அனுமதிக்க தயங்காமல் இருப்பார்கள். எனவே வீரர்களை உள்வாங்குவதற்கு முன்னால், உருவாக்குவதற்கான சுமூக சூழலை ஏற்படுத்த வேண்டும்.
ஆசியா என்ற அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது, பெரிய கிரிக்கெட் அமைப்பான இந்தியாவிற்கு எந்த வகையிலும் சளைக்காமல் சிறந்த வீரர்களைக் கொண்டு வந்ததிலிருந்து, உலகக் கோப்பைகளை கைப்பற்றியதில் இருந்து, இலங்கை கிரிக்கெட் அசாதாரணமான முறையில் செயல்பட்டு இருக்கிறது. இதை யாராலும் மறுக்கவே முடியாது.
கிரிக்கெட்டில் அரியணை என்பது யாருக்கும் நீடித்தது கிடையாது. ஏற்ற இறக்கங்கள் தனிப்பட்ட வீரர்களுக்கு உண்டு என்பது போலவே அணிகளுக்கும் உண்டு. இதில் கேலிக்கோ கிண்டலுக்கோ இடம் கிடையாது.
2007 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தோல்விதான் இந்திய கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்களுக்கு வழி அமைத்தது. படுதோல்விகள் எப்பொழுதுமே பாதை அமைத்துக் கொடுப்பதாக வரலாற்றில் இருந்திருக்கின்றன. இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் அதன் ரசிகர்களும் நடப்பு உலகக்கோப்பை தோல்விகளை அவ்வாறாகத்தான் ஆக்கப் பூர்வமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
இங்கிருந்து குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தைரியமான, நேர்மையான ஆட்களைக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே விரும்புகின்ற மாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட அளவை எட்ட முடியும். எனவே இலங்கை கிரிக்கெட்டின் ரசிகர்கள் தங்கள் அமைப்பை அதை நோக்கிய செயல்பாட்டுக்குள் தள்ளுவதற்கான அழுத்தத்தை உருவாக்க வேண்டும்.
எல்லா பகுதிகளில் இருந்தும் வீரர்கள் உருவாவதற்கான சூழலை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தைப் பெறவேண்டும். கிரிக்கெட் மேற்கொண்டு வலிமை பெற இலங்கை மாதிரியான அணிகள் பலம் பெறுவது அவசியம். அதே சமயத்தில் குறுகிய வடிவ போட்டிகள் இந்தத் தோல்விகளிலிருந்து வெளியில் கொண்டு வரும்.
ஆனால் அதில் மயங்கி நின்று விடக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஜெயவர்த்தனே, சங்ககாரா போன்ற ஜாம்பவான்கள் இலங்கை கிரிக்கெட்டில் முக்கிய பங்காற்ற வேண்டும். 2022 ஆசிய கோப்பையை வென்ற இலங்கை மீண்டும் பாதாளத்திற்கு செல்கிறது. இதனால், அணியில் என்ன நடக்கிறது என்பதை முதலில், கண்டுபிடிக்க வேண்டும்.