தரம்சாலா : 2023 உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தன் திறமையை காட்டி விட்டார் முகமது ஷமி.
ஆனாலும், இதற்கு முன்பு அவரை ஓரங்கட்டி வைத்திருந்ததை போலவே 5 விக்கெட் எடுத்து நியூசிலாந்து அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த ஷமி மீண்டும் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற பேச்சு இப்போதே கிளம்பிவிட்டது.
கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்களே இந்திய அணியில் நடக்கும் இந்த கொடுமையை பற்றி கூறி தங்கள் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
முகமது ஷமி இந்திய அணியின் பும்ராவை விட அதிக அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர். வயதானாலும் அவரது பந்துவீச்சு இன்னும் துல்லியமாக உள்ளது. அவர் போட்டியில் ஆடினாலே விக்கெட் வேட்டை நடத்துகிறார். ஆனாலும், பும்ரா அணிக்கு திரும்பிய உடன் இந்திய அணியின் ஷமி மாற்று வீரராக மாற்றப்பட்டார்.
பும்ரா - முகமது சிராஜ் கூட்டணியை ஆதரித்து அவர்களை தொடர்ந்து போட்டிகளில் பயன்படுத்தத் துவங்கினார் கேப்டன் ரோஹித் சர்மா. ஷமி அவர்களுக்கு மாற்று வீரராக அணியில் இடம் பிடித்தார். சிராஜ் அல்லது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே ஷமிக்கு வாய்ப்பு என்ற நிலை இருந்தது. ஆனால், ஷமியின் திறமையை குறித்து இந்திய அணி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போது அணியில் இடம்பெற்ற ஷமி அப்போதும் 5 விக்கெட் வீழ்த்தினார். அதன் பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் பங்கேற்று அதிலும் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

இப்படி போட்டிக்கு போட்டி 5 விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளரை எந்த அணியும் வெளியே அமர வைக்காது. ஆனால், அந்த கொடுமை இந்திய அணியில் மட்டுமே நடக்கிறது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மூன்று வேகப் பந்துவீச்சாளர் தேவை என்றால் பும்ரா, சிராஜ் உடன் ஷர்துல் தாக்குர் என்ற உண்மையிலேயே சுமாரான பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்படுகிறார். இது பற்றி கேட்டால் அவர் பேட்டிங் ஆல் - ரவுண்டர் என்ற பதில் வருகிறது. ஆனால், இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட அவர் பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது.
இப்படி இருக்கையில் ஷர்துல் தாக்குருக்கு பதில் ஷமி அனைத்து போட்டிகளிலுமே ஆடி இருக்க வேண்டும். ஆனால், வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால், அணியின் சம நிலையை கருத்தில் கொண்டு ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். பாண்டியா, ஷர்துல் என இரண்டு ஆல் - ரவுண்டர்களுமே இல்லை. சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து இந்திய அணி நியூசிலாந்து போட்டியில் களமிறங்கியது. இது மிகப் பெரிய ரிஸ்க். ஆனால், ஷமி அசாதாரணமாக 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். மேட்ச் வின்னரான அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால் மீண்டும், ஷமி நீக்கப்பட்டு, ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்படுவார் என்றே கூறப்படுகிறது.
இது பற்றி பேசிய ஹர்பஜன் சிங், "ஷமி ஹர்திக் இடத்தில் தான் ஆடுகிறார். அவர் அணிக்கு திரும்பிய பின் அவரை நீக்கி விடுவார்கள். ஷமி பவுலிங்கில் ஒரு கோலி போன்றவர். ஆனால், அவருக்கு அணியில் உத்தரவாதம் இல்லை" என தன் மனக் குமுறலை வெளிப்படுத்தினார்.
"போட்டிகளை வென்று கொடுக்கும் பவுலரான ஷமியை போட்டிகளில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து விலக்கி வைக்க பயிற்சியாளர்கள் குழுவிற்கு நிறைய தைரியம் வேண்டும்" என முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் இது குறித்து பேசி இருக்கிறார்.