டெல்லி : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
இந்தப் போட்டி துவங்கும் முன் இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் கனத்த இதயத்துடன் தான் இந்தப் போட்டியில் ஆட உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களில் இரண்டு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பல ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அதை ஒட்டியே இரு அணி வீரர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
முதல் நிலநடுக்கத்தின் போதே பல ஆயிரம் பேர் மரணமடைந்தனர். இந்த நிலையில், நேற்று இரண்டாவது பெரிய நிலநடுக்கம் வந்து மீதமிருந்த பல வீடுகளை தரை மட்டமாக்கியது.
இந்த நிலையில், இந்தியாவில் உலகக்கோப்பை தொடரில் ஆடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக களமிறங்கினர்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியை இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்ய வைத்து தங்கள் ஸ்பின் பந்துவீச்சால் கட்டுப்படுத்தி வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் அந்த அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி தங்களின் முதல் போட்டியில் வங்கதேச அணியிடம் மோசமான தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்தே அந்த அணி தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் அதே முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இந்தியா இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வென்று நெட் ரன் ரேட்டை அதிகரிக்க முயற்சி செய்யும். இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு, ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா போட்டியில் ஆடிய மற்ற வீரர்கள் அப்படியே தொடர்கின்றனர்.