டெல்லி : இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது தொலைக்காட்சி நேரலையில் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வர்ணனை செய்தார்.
அப்போது அவர் பேசிய பேச்சு எல்லை மீறியதாக இருந்தது. சில பேச்சுக்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

இந்த நிலையில், பல ரசிகர்கள் அவர் மது அருந்தி விட்டு பேசுகிறார் என கண்டுபிடித்து இணையத்தில் வறுத்து எடுத்து வருகின்றனர்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டியில் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் - விராட் கோலியின் பழைய மோதல் குறித்து ரசிகர்கள் நினைவுபடுத்திப் பார்த்து நவீன் உல் ஹக் எப்போது களத்துக்கு வந்தாலும் "கோலி, கோலி" என கூச்சல் போடத் துவங்கினர்.
மேலும், நவீன் உல் ஹக் நிலை பரிதாபமாக உள்ளதாக முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் பலர் கூறி வந்தனர். அப்போது ரவி சாஸ்திரி ஹிந்தி நேரலையில், "நவீன் உல் ஹக் தன் வாழ்நாள் முழுவதும், எங்கே போய் விளையாடினாலும் இனி கோலி, கோலி என்ற கூச்சலை தான் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும்" என நவீனை தாக்கிப் பேசினார்.
இந்தப் போட்டி நடந்த டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி பெவிலியன் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து தான் வீரர்கள் ஆடுகளத்துக்கு வர வேண்டும். அதே வழியாகவே வீரர்கள் அறைக்கு செல்ல வேண்டும்.
அதைப் பற்றி பேசிய ரவி சாஸ்திரி, "இந்த நாளின் முடிவில் நவீன் உல் ஹக் விராட் கோலி பெவிலியனுக்கு தான் செல்ல வேண்டும்" என மீண்டும் நேரலையில் மட்டம் தட்டி பேசினார். ஒரு மூத்த வர்ணனையாளர் இப்படி பேசுகிறாரே என ரசிகர்கள் அப்போதே அதிர்ச்சி அடைந்தனர். ரவி சாஸ்திரியை தொலைக்காட்சியில் காட்டிய போது அவர் கண்கள் சொருகிய நிலையில் தான் இருந்தது. அதை வைத்தே அவர் மது அருந்தி தான் இப்படி பேசுகிறார் என ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்.
அடுத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கும் அகமதாபாத்தில் மருத்துவமனை படுக்கைகளை தயார் செய்ய வேண்டும் என வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். அதை வேடிக்கையாக சிலர் எடுத்துக் கொண்டாலும், சில ரசிகர்கள் அவர் பொறுப்பே இல்லாமல் இப்படி பேசி இருக்கிறார் என கொதித்தனர்.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது பலம் முறை மதுவும் கையுமாக காட்சி அளித்து இருக்கிறார். சில சமயம், போட்டிகளின் போதே மது அருந்தி விட்டு மயக்கத்தில் இருந்த சம்பவமெல்லாம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.