அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில் காய்ச்சலில் இருந்து மீண்டு தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
டெங்கு காய்ச்சல் வந்தால் 10 நாட்களுக்கு அவரால் பயிற்சியில் கூட ஈடுபட முடியாது என கூறப்பட்ட நிலையில், அவர் இத்தனை விரைவாக எப்படி மீண்டு வந்தார்? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்த நிலையில், இதன் பின்னணியில் யுவராஜ் சிங் இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னணியில் என்ன நடந்தது?

சுப்மன் கில் 2023 உலகக்கோப்பை தொடரின் துவக்கத்திலேயே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக, அவரால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஆட முடியவில்லை.
டெங்கு காய்ச்சலால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுப்மன் கில், அங்கிருந்து கிளம்பி நேராக இந்திய அணி அடுத்து பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ள அகமதாபாத்திற்கு சென்றார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு வந்தால் உடல் மிகவும் சோர்ந்து போகும். அதில் இருந்து மீண்டு வர சில நாட்கள் ஆகும் என கூறப்பட்ட நிலையில், சுப்மன் கில் அதிரடியாக இரண்டு நாட்களிலேயே அடுத்த போட்டிக்கு தயார் ஆகி வருகிறார்.
சுப்மன் கில் காய்ச்சலால் தவித்து வந்த போது யுவராஜ் சிங் அவரிடம் பேசி இருக்கிறார். அப்போது, தான் கேன்சருடன் போரடிய நிலையில் தான் உலகக்கோப்பை தொடரில் ஆடியதாக கூறி சுப்மன் கில்லுக்கு உற்சாகம் ஊட்டி இருக்கிறார்.
யுவராஜ் சிங்கின் அந்த வார்த்தை சுப்மன் கில்லை எழுந்து உட்கார வைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அவரை தயாராக செய்துள்ளது. தான் சுப்மன் கில்லிடம் பேசியது குறித்து யுவராஜ் சிங் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
"நான் சுப்மன் கில்லை எழுந்து வர வைத்து விட்டேன். நான் புற்றுநோயுடன் போராடி உலகக் கோப்பையில் விளையாடியதை அவரிடம் சொன்னேன், எனவே தான் அவர் அணியில் சேர விரைவாக தயாராகிவிட்டார். இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அவர் தயாராக இருப்பார் என நம்புகிறேன். காய்ச்சல் மற்றும் டெங்கு இருக்கும்போது கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது மிகவும் கடினம், அதை நான் அனுபவித்து இருக்கிறேன். எனவே அவர் உடல்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நம்புகிறேன்" என்றார் யுவராஜ் சிங்.
இளம் வீரரை காய்ச்சலில் இருந்து மீது மீட்டு, உலகக்கோப்பை தொடரில் ஆட வைக்க யுவராஜ் சிங் களமிறங்கி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.