சென்னை : வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், உலக் தொடரில் தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது நியூசிலாந்து அணி.

வங்கதேசம் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினாலும், நியூசிலாந்து போட்டி உட்பட அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஆறாம் இடத்தை பிடித்து இருக்கிறது.
இந்தப் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தது, அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 40, முஷ்பிகுர் ரஹீம் 66 ரன்கள் சேர்த்தனர். மக்மதுல்லா கடைசி ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்தார்.
நியூசிலாந்து அணியின் பெர்குசன் 3 விக்கெட்கள் சாய்த்தார். போல்ட் 2, ஹென்றி 2, சான்ட்னர் 1, பிலிப்ஸ் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 246 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
துவக்க வீரராக ஆடிய ரச்சின் ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் நங்கூரம் போட்டது போல நின்று ஆடினார். கான்வே 45 ரன்களில் வெளியேறிய போதும், அடுத்து வந்த டேரில் மிட்செல் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக சேஸிங் செய்தார் வில்லியம்சன்.
அவர் அரைசதம் அடித்த நிலையில், ரன் ஓடிய போது பீல்டர் வீசிய பந்து அவரது கையில் பட்டது. ஏற்கனவே, காலில் அவருக்கு பலத்த காயம் இருந்து அதில் இருந்து மீள அவர் அறுவை சிகிச்சை செய்த நிலையில், தற்போது கை விரலில் காயம் ஏற்பட்டது.
அத்தோடு விளையாட நினைத்த அவரால் ஆட முடியவில்லை. பின் அவர் பாதியில் வெளியேறினார். அடுத்து பிலிப்ஸ் - மிட்செல் இணைந்து 42.5 ஓவரில் இலக்கை எட்டி நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். மிட்செல் 67 பந்தில் 89 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை தொடர்ந்து, வங்கதேச அணியையும் வீழ்த்தி மூன்று வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி இந்த உலகக்கோப்பைக்கு வரும் முன் சராசரியான அணியாக பார்க்கப்பட்ட நிலையில், அந்த கதையை மாற்றி இருக்கிறது. வங்கதேசம் 2 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.