மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடிய பத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எனினும் இதனை ஜீரணிக்க முடியாத பாகிஸ்தான் விமர்சகர்கள் தொடர்ந்து இந்தியா மீது தேவையில்லாத பழி சுமத்தி வருகிறார்கள்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வேறு பந்து வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இன்னும் சிலர் ரோகித் சர்மா டாஸ் போடும்போது அவருக்கு ஏற்ற முடிவை நடுவர்கள் வழங்குவதாக கூறியிருந்தார்.

மேலும் எதிரணி கேப்டன் பார்க்காதவாறு டாசை தூரமாக ரோகித் சர்மா வீசி வருவதாகவும் அவர் குற்றச்சாட்டினார். இன்னும் சிலர் இந்தியாவுக்கு சாதகமாக டிஆர்எஸ் தொழில்நுட்பம் மாற்றப்படுகிறது என்றும் கூறியிருந்தார்கள். மேலும் ஆடுகளம் இந்தியாவுக்கு சாதகமாக அமைக்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் குற்றச்சாட்டுகள் வலம் வந்தன.
இந்த நிலையில் இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம், இது போன்ற கருத்துக்களை பாகிஸ்தான் விமர்சகர்கள் கூறுவதன் மூலம் தங்களுக்கு அவமானமாக இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், டாஸ் இந்த இடத்தில் தான் விழ வேண்டும் என்று யார் முடிவு எடுத்தார்கள். டாஸ் வீசப்படும் போது அங்கு இருக்கும் மேட் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற கருத்தை தயவுசெய்து பேசாதீர்கள் மிகவும் வெட்கமாக இருக்கிறது. அவமானமாக நான் நினைக்கிறேன். இதைப் பற்றி என்னால் எந்த கருத்தையும் கூற முடியவில்லை என்று கோபமாக வசிம் அக்ரம் பேசினார். இந்த கருத்தை ஆமோதித்த மோயின் கான் ஒவ்வொரு கேப்டனுக்கும் டாஸ் வீசும் போது ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் அதை தேவையில்லாத சர்ச்சையாக ஆக்க வேண்டாம். சிக்கந்தர் பட் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இதை பெரிது படுத்த தேவையில்லை என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய சோபிப் மாலிக், இதைப் பற்றி எல்லாம் நாம் விவாதிக்கவே கூடாது என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்து விட்டார்.