அகமதாபாத் : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இந்திய வீரர்கள் கண்ணீரை அடக்கிக் கொண்டு போட்டி முடிந்த உடன் கோப்பை மற்றும் சிறந்த வீரர் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
அப்போது விருது வழங்க வந்த சச்சின் டெண்டுல்கர், இந்திய வீரர்களை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். அந்த காட்சி சோகத்திலும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
1992 முதல் 2011 வரை ஆறு உலகக்கோப்பை தொடர்களில் ஆடிய அனுபவம் கொண்டவர் சச்சின் டெண்டுல்கர். ஆறு முறை முயன்றும், ஆறாவது முறைதான் அவரால் உலகக்கோப்பை வெல்ல முடிந்தது.

அதனால், சச்சினை தவிர வேறு யாருக்கும் உலகக்கோப்பை தோல்வி குறித்து அதிகம் தெரியாது. இந்த நிலையில், சச்சின் இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்தியா முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் வெற்றி இலக்கை தொட்டது. இந்தியா சிறப்பாக போராடியும் விக்கெட் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷேன் - ட்ராவிஸ் ஹெட் ஜோடி நீண்ட கூட்டணி அமைத்து இந்தியாவின் கைகளில் இருந்து வெற்றியை தட்டிப் பறித்துச் சென்றனர்.
இந்தியா தோல்வியடைந்த பின் முகமது சிராஜ், கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டு அழுதனர். விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் கீழே சோகத்தில் தலைகுனிந்து அமர்ந்தார். விராட் கோலி உறைந்து போய் நின்றார்.
போட்டி முடிந்த உடன் நடந்த நிகழ்ச்சியிலும் இந்திய வீரர்கள் கண்ணீரை அடக்கிக் கொண்டு நின்றனர். அப்போது ஆட்ட நாயகன் விருது வழங்க வந்த சச்சின் டெண்டுல்கர், இந்திய வீரர்களை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். எந்த வீரரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தோல்வி கொடுத்த வலியில் வார்த்தை வராமல் நின்று கொண்டு இருந்தனர். சச்சின் அவர்களை தட்டிக் கொடுத்து, கட்டி அணைத்து தேற்றினார்.
ஆறு முறை உலகக்கோப்பை தொடரில் ஆடி அதில் ஐந்து முறை இதே போன்ற வலியை அனுபவித்தவர் சச்சின் டெண்டுல்கர். குறிப்பாக 2003 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இதே ஆஸ்திரேலிய அணியிடம் தான் கங்குலி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. தற்போது விராட் கோலி உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றது போலவே, அப்போது சச்சின் டெண்டுல்கர் தொடர்நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.