புனே : வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆட உள்ள நிலையில், அந்த அணியின் பலவீனம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தான் வங்கதேச அணியின் பெரிய பலவீனம். பும்ரா இந்தப் போட்டியில் பந்து வீசினால் வங்கதேசம் வெற்றி பெறுவது மிகவும் கடினம் தான்.
2019 உலகக்கோப்பையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் பும்ரா 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அப்போது இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் பும்ரா பந்துவீச்சால் தோல்வி அடைந்தது.

அதன் பின் இந்தியா நான்கு போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிராக ஆடி உள்ளது. அந்த நான்கில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அந்த நான்கு போட்டிகளிலும் பும்ரா இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்தியா கடைசியாக வங்கதேச அணியுடன் ஆடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 - 1 என வங்கதேசம் வெற்றி பெற்றது. அந்த ஒரு வெற்றியும் கிடைக்கக் காரணம் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்தது தான்.
இந்த மூன்று போட்டிகளுக்கு பின் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து இருந்தது. இந்த நான்கு போட்டிகளிலும் பும்ரா இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இதில் இருந்தே பும்ராவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். பும்ராவின் யார்க்கர்கள் வங்கதேச அணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. தற்போதைய உலகக்கோப்பை போட்டியிலும் வங்கதேச அணி, பும்ராவை பயத்துடனே சந்திக்கும்.
இந்திய அணி இந்தப் போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன், ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவையும் பயன்படுத்தி வங்கதேச அணிக்கு எதிராக வேகப் பந்துவீச்சால் வியூகம் அமைக்கும். சுழற் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜா கை கொடுப்பார்கள்.