
கட்டாயத்தில் ஐசிசி
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திட்டமிட்ட காலத்திற்குள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த தொடரின் கால அளவை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஐசிசி.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவக்கம்
கடந்த 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கியது. அதில் ஒவ்வொரு நாடும் ஆறு அணிகளுக்கு எதிராக ஆறு டெஸ்ட் தொடர்களில் மோத வேண்டும். அதில் பெறும் புள்ளிகள் அடிப்படையில் இறுதிப் போட்டி நடைபெறும்.

கிரிக்கெட்டின் நிலை
இரண்டு ஆண்டுகள் கால அளவில் இந்த நீண்ட சாம்பியன்ஷிப் பல்வேறு டெஸ்ட் தொடர்களாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா வைரஸால் கிரிக்கெட் உலகம் ஸ்தம்பித்து உள்ளது. கடந்த மார்ச் 13க்கு பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.

டெஸ்ட் தொடர்கள் சந்தேகம்
இதே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு பகுதியாக நடைபெற இருந்த இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே போல, இனி வரும் மாதங்களில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடர்களும் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் உள்ளது.

சிக்கல்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து, கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் சாதாரணமாக நடைபெறும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பல முக்கிய கிரிக்கெட் தொடர்கள் நடக்க வேண்டி உள்ளது. அதுவும் சிக்கலை ஏற்படுத்தும்.

முக்கிய தொடர்கள்
2020 மற்றும் 2021 ஐபிஎல் தொடர்கள், 2020 டி20 உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்கள் அதில் அடக்கம். இது தவிர, மற்ற ஒருநாள், டி20 தொடர்களை அதிகம் நடத்தாமல், டெஸ்ட் தொடர்களை மட்டும் நடத்தினால் கூட அனைத்து அணிகளும் போதிய ஓய்வு எடுத்துக் கொண்டு ஜூன் 2021க்குள் ஆறு டெஸ்ட் தொடர்களில் ஆடி முடிப்பது கடினம் தான் என கூறப்படுகிறது.

இறுதிப் போட்டி மாற்றம்
அதனால், வேறு வழியின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கால அளவை மாற்றி, இறுதிப் போட்டியை வேறு ஒரு தேதியில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, அனைத்து நாடுகளும் ஆறு டெஸ்ட் தொடர்கள் ஆட வேண்டும் என்ற எண்ணிகையை மாற்றாமல், இறுதிப் போட்டி தேதியை மாற்றிக் கொள்ளலாம் என கூறியதை அடுத்தே ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications