மும்பை: சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அழிந்து வருவதாக பல முன்னாள் ஜாம்பவான்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் எச்சரிக்கை விடுத்து வந்தனர். காரணம் ஒரு நாள் கிரிக்கெட் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், இரு முனையிலும் புது பந்து பயன்படுத்தப்படுவதால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஒன்றே ஒரு நாள் கிரிக்கெட்டில் நடக்காமல் போய்விட்டது என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் 50 ஓவர் முழுவதும் அதிரடி காட்டுவதால் ரசிகர்களுக்கு அயர்ச்சி ஏற்படுவதால் ஒருநாள் கிரிக்கெட்டை யாரும் பார்ப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த விதியை மாற்ற ஐசிசி முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி 25 ஓவர் வரை இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படும் என்றும் 25ஆவது ஓவரிலிருந்து 50 வது ஓவர் வரை ஒரு பந்து தான் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது 25 வது ஓவருக்கு பிறகு பயன்படுத்தப்பட்ட இரண்டு பந்துகளின் ஒரு பந்து விலக்கிக் கொள்ளப்படும். மற்றொரு இருக்கும் பந்தை வைத்து 50 ஓவரும் வீச வேண்டும். இதன் மூலம் கடைசி பத்து ஓவரில் பந்து நன்றாக ரிவர்ஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டு பந்தில் எந்த பந்தை நாங்கள் 50 ஓவர் வரை பயன்படுத்த போகிறோம் என்பதை பவுலிங் செய்யும் அணியே முடிவெடுக்கும்.
இது குறித்து கங்குலி தலைமையிலான குழு ஆய்வு நடத்தியதில், ஒரு நாள் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்து 35 ஓவருக்கு பிறகு சேதம் அடைவதால் அதனை நடுவர்கள் மாற்றுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து இருக்கிறது. தற்போது புதிய விதியின் மூலம் ஒரு பந்தை மட்டும் 35 முதல் 37 ஓவர் வரை பயன்படுத்த முடியும். இதனால் பந்தும் சேதமாகாது. பந்தும் நன்றாக ரிவர்ஸ் ஆகும்.
இதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைவாக வீசப்படுகிறது. ஒரு நாளைக்கு 90 ஓவர் வீச வேண்டும் என்ற விதியை அனைத்து அணிகளும் மறந்து தற்போது 70 ஓவர் வீசுவதையே பெரிய சவாலாக மாறிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவர் தொடங்க 60 வினாடி தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விதியை கொண்டு வர ஐசிசி முடிவு எடுத்திருக்கிறது.
60 வினாடிக்கு மேல் 3வது முறை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு முறைக்கும் ஐந்து ரன்கள் அபராதம் விதிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த புதிய விதிகள் குறித்து ஜிம்பாபேவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். அதில் எப்போது இந்த புதிய விதிகள் அமலுக்கு வரப்போகிறது என்பது தெரிய வரும்.