மும்பை: 2027 ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிரடி மாற்றங்கள் நிகழப் போகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி கொண்டு வந்தது. ஆனால் இந்த தொடரில் வெறும் எட்டு அணிகள் மட்டுமே பங்கு பெற்றது.
அதிலும் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்பார்த்தபடி சிறப்பாக விளையாடுவது கிடையாது என்று குற்றச்சாட்டு இருந்தது. பெரிய அணிகளுடன் இவர்கள் மோதினால், போட்டிகள் மூன்று நாட்களில் முடிவடைந்து விடுவதாக விமர்சனம் எழுந்தது.

இதனை சரி செய்யும் விதமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளை இரண்டு பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்றும் பலமான அணிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் வகையிலும், பலவீனமான அணிகள் இரண்டாவது பிரிவில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்குள் மோதிக் கொள்ளும் வகையிலும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் பலமான அணியில் கடைசி இடத்தை பிடிக்கும் அணி அடுத்த சைக்கிளில் இரண்டாவது பிரிவுக்கு சென்று விடும். பலவீனமான அணிகளில் நன்றாக விளையாடி முதலிடத்தை பிடிக்கும் அணி முதல் பிரிவுக்கு செல்லும் என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்களை இரண்டாவது பிரிவில் சேர்த்தால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுடன் தங்களால் மோத முடியாது என்றும் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் மட்டும் தான் தங்களால் விளையாட முடியும் என்றும் குற்றம் சாட்டியது.
இதனால் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும் ரசிகர்கள் போட்டியை விட்டு சென்றுவிடுவார்கள் என்றும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதேபோன்று இந்த முடிவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இதற்கு காரணம் ஒரு சீசன் தொடர்ந்து இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.
ஒருவேளை அடுத்த சுற்றுக்கு சென்று விட்டால், தங்களால் ஆசஸ் போன்ற தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு விடலாம் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை எடுத்திருந்தது. இதனை அடுத்து இந்த திட்டத்தை கைவிடுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக 13 அணிகளையும் சேர்த்து புதிய சைக்கிளை உருவாக்க icc முடிவெடுத்துள்ளது.
இதன்படி அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம் பெற கூடும். இதேபோன்று உலகக்கோப்பை ஒரு நாள் தொடருக்கு அணியை தகுதி செய்ய சூப்பர் லீக் தொடர் என கடந்த முறை நடத்தப்பட்டது. அது 2023 உலக கோப்பைக்கு பிறகு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த தொடரை மீண்டும் கொண்டுவர ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஒரு நாள் தொடருக்கு மீண்டும் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அட்டவணையில் குழப்பத்தை ஏற்படுத்தாத வண்ணம் எப்படி போட்டிகளை நடத்துவது என்பது குறித்து ஐசிசி முடிவு எடுக்க உள்ளது.