மும்பை : செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருது இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
செப்டம்பர் மாதம் கிரிக்கெட் உலகில் அனைத்து முக்கிய அணிகளும் உலகக்கோப்பை தொடருக்காக பல்வேறு ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ஆடின. இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.
அந்த தொடரில் சுப்மன் கில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அரைசதம். வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்தார். ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இரண்டு போட்டிகளில் 74 ரன்கள் மற்றும் 104 ரன்கள் அடித்தார் சுப்மன் கில். ஒரே மாதத்தில் 480 ரன்களை அடித்துக் குவித்தார். அதன் சராசரி 80 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 99.37 ஆகும்.
மறுபுறம், சிராஜ் ஆசிய கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிராக 3 விக்கெட், சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக 1 விக்கெட் எடுத்தார். பின் இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்டு ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய அவர், அந்தப் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி தன் சிறந்த ஒருநாள் போட்டி பந்துவீச்சை பதிவு செய்தார். பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இரண்டு போட்டிகளில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
முகமது சிராஜ் சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால், சுப்மன் கில் தான் ஆடிய ஒரு போட்டியை தவிர மற்ற போட்டிகளில் அரைசதம், சதம் என ரன் வேட்டையாடி இருக்கிறார். அதே சமயம், இலங்கை அணியை 50 ரன்களில் சுருட்டிய போட்டியில் முகமது சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதும் செய்த செயலும் சாதாரணமானது இல்லை.
எனினும், சுப்மன் கில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை ஆடியதால் அவருக்கு செப்டம்பர் 2௦23க்கான ஐசிசி சிறந்த வீரர் விருது அளிக்கப்பட்டது. முகமது சிராஜ் பெயர் கடைசி நேரத்தில் விலக்கப்பட்டு, சுப்மன் கில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இரட்டை சதம் அடித்த போதும் சுப்மன் கில்லுக்கு அந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை ஒரே ஆண்டில் இரண்டு முறை பெறும் முதல் இந்திய வீரர் சுப்மன் கில் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்மன் கில் தற்போது டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்து உலகக்கோப்பை தொடரில் இந்தியா அடுத்து ஆட உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகி இருக்கிறார்.