ஜனவரி மாத வீரர் பந்த்
கடந்த ஜனவரி மாதம் முதல் சர்வதேச அளவில் சிற்பபாக செயல்பட்டு வரும் வீரரை தேர்ந்தெடுத்து ஐசிசி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வழங்கி வருகிறது. முதல் முறையாக வழங்கப்பட்ட விருதை இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தட்டி சென்றார்.
ரவி அஸ்வின் பெயர் பரிந்துரை
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வீரர்களின் பெயர்கள் பரிந்துரைகள் செய்யப்பட்டு இரண்டாவது திங்கட்கிழமையில் இந்த விருது அறிவிக்கப்படும் என்று ஐசிசி தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்திற்கான வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய வீரர் ரவி அஸ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் இளம் வீரர் கைல் மேயர்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஜோ ரூட், மேயர்ஸ் பரிந்துரை
கடந்த மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 176 ரன்கள் மற்றும் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரவி அஸ்வின். இதேபோல 3 போட்டிகளில் விளையாடி 333 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜோ ரூட். வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 210 ரன்களை அடித்து தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார் மேற்கிந்திய தீவுகள் வீரர் மேயர்ஸ்.
திங்களன்று அறிவிப்பு
இவர்கள் 3 பேருக்கு இடையில்தான் தற்போது போட்டி. இதேபோல மகளிரில் இங்கிலாந்தை சேர்ந்த டாமி பியோமான்ட், நாட் ஸ்சீவர் மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த பிருக் ஹாலிடே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் மற்றும் ரசிகர்கள் இணைந்து தேர்ந்தெடுக்கின்றனர்.