மும்பை : ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு ஐ சி சி விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலகக்கோப்பை தொடரின் இறுதி கட்ட லீக் சுற்று போட்டிகள் மற்றும் நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றது.
இதனால் இந்த மாதத்தில் யார் சிறந்த வீரருக்கான விருதை வாங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த விருதுக்கு மூன்று வீரர்களை ஐசிசி பரிந்துரை செய்திருந்தது.

அதில் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி தனி ஆளாக இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற முகமது சமி இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முகமது சமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்திய மேக்ஸ்வெலும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தார்.
மேலும் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டும் இந்த லிஸ்டில் இடம் பெற்றிருந்தார். இறுதிப்போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்றவர் யார் என்பது குறித்து ஐசிசி தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதன்படி டிராவிஸ் ஹெட் இந்த விருதை வென்று இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
டிராவிஸ் ஹெட் அரை இறுதியில் தொடர்ந்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் 48 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். இதேபோன்று இறுதி ஆட்டத்தில் 120 பந்துகளில் 137 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் அபாரமான ஒரு கேட்சையும் பிடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய ரசிகர்களுக்கு வில்லனாக திகழ்ந்த டிராவிஸ் ஹெட், ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.