துபாய் : 2௦20 டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்தது ஐசிசி. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் உலகக்கோப்பை தொடரை நடத்த முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்தது ஐசிசி.
டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்தால் அந்த தேதிகளில் 2020 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது.

நீண்ட காலமாக டி20 உலகக்கோப்பையை தள்ளி வைக்கும் அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் பிசிசிஐ தவித்து வந்தது. தற்போது ஐசிசியின் தள்ளி வைக்கும் அறிவிப்பால் பிசிசிஐ மகிழ்ச்சி அடைந்துள்ளது.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு உலகக்கோப்பை தொடர்கள் நடக்க இருந்தது. அந்த இரண்டு தொடர்களும் முன்பு முடிவு செய்யப்பட்ட மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி 2020 டி20 உலகக்கோப்பை தொடர் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 என்ற பெயரில் அக்டோபர் - நவம்பர் 2021இல் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று நடைபெறும்.
2021 டி20 உலகக்கோப்பை தொடர் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 என்ற பெயரில் அக்டோபர் - நவம்பர் 2022இல் நடைபெறும். இந்த தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 13 அன்று நடைபெறும்.
2021 மகளிர் டி20 உலகக்கோப்பை பிப்ரவரியில் நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அந்த தொடர் திட்டமிட்டபடி நடக்க சாத்தியம் உள்ளதா? என தொடர்ந்து கண்காணித்து வருவோம் என்றும், அந்த தொடருக்கான பணிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் ஐசிசி கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐசிசியின் அதிகாரப்பூர்வ முடிவை அடுத்து பிசிசிஐ விரைவில் ஐபிஎல் தொடருக்கான பணிகளில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஐபிஎல் தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.