மும்பை : ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆக ஜெய்ஷா அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய்ஷா தற்போது ஐசிசிக்கு சென்று இருக்கிறார்.
ஜெய்ஷா ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்த சூழல் இந்திய கிரிக்கெட்டுக்கு பல நல்ல விஷயத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வரப்போகும் காலம் போதாத காலமாக அமையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் பிசிசிஐ க்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் நடந்தால் இந்தியாவும், இந்தியாவில் கிரிக்கெட் தொடர் வந்தால் பாகிஸ்தானும் செல்லமாட்டோம் என்று அடிக்கடி கூறிவந்தது. வரும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா தாங்கள் பாகிஸ்தானுக்கு வரமாட்டோம் என்றும் வேறு நாட்டில் தங்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் கூறி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டிகளை நடத்தும் அதே கால நேரத்தில் பாகிஸ்தான் பிரிமீயர் லீக் தொடரும் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஜெய்ஷா ஐசிசி தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். இதேபோன்று பிசிசிஐயையும் தற்போது மறைமுகமாக ஜெய்ஷா தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால் முடிவு எடுக்கும் அனைத்து பவரும் ஜெய்ஷா கையில் தான் இருக்கிறது. இதனை வைத்துக்கொண்டு பாகிஸ்தானில் இந்தியா விளையாட தேவையில்லை என்ற முடிவை ஜெய்ஷா எடுப்பார். இதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் கிடைக்காமல் போய்விடும்.
அது மட்டுமில்லாமல் இனி பெரிய தொடர்கள் பாகிஸ்தானில் நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறினால் இதனை ஜெய்ஷா உடனடியாக தடுத்து விடுவார். மேலும் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய நிதியும் ஏதேனும் காரணம் சொல்லி அதனை தடுக்கும் முயற்சியில் ஜெய்ஷா ஈடுபடுவார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் எதிர்வினை ஆற்றும். இதனால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் முன்பு போல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.