மும்பை: டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து அபிஷேக் சர்மா, 931 புள்ளிகளை பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி தரவரிசையில் 931 புள்ளிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் இருந்தார். 6 போட்டிகளில் ஆடிய அவர் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 314 ரன்களை விளாசியது அனைவராலும் பாராட்டுக்களைப் பெற்றது.

இந்த நிலையில் ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா நம்பர் 1 இடத்தில் தொடர்வதோடு, புதிய வரலாற்றையும் படைத்திருக்கிறார். அதாவது ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
அபிஷேக் சர்மாவின் ஹாட்ரிக் அரைசதம் காரணமாக, 931 புள்ளிகளை பெற்றுள்ளார். இதுவரை இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் 919 ரேட்டிங் புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்தது. அதேபோல் இந்திய டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 912 புள்ளிகளையும், விராட் கோலி 909 புள்ளிகளையும் பெற்றதே சாதனையாக இருந்து வந்தது.
அதேபோல் இந்தப் பட்டியலில் இந்திய அணிக்கு எதிராக சதம் விளாசிய இலங்கை தொடக்க வீரர் நிசாங்கா 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் மோசமான ஃபார்ம் காரணமாக 2 இடங்கள் பின் தங்கி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். நட்சத்திர வீரர் திலக் வர்மா 3வது இடத்திலேயே தொடர்கிறார்.
அதேபோல் சஞ்சு சாம்சன் 8 இடங்கள் முன்னேறி 31வது இடத்திற்கு வந்துள்ளார். பவுலிங்கை பொறுத்தவரை இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் தொடர்கிறார். நட்சத்திர ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 9 இடங்கள் முன்னேறி 12வது இடத்திலும், அக்சர் படேல் 13வது இடத்திலும் இருக்கின்றனர். டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.