துபாய்: ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் மூன்று பிரிவுகளிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா பட்டையை கிளப்பிய நிலையில் அவர் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார்.
ஆசிய கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அது ஐசிசி டி20 தரவரிசை பட்டியலிலும் எதிரொலித்திருக்கிறது. இந்த நிலையில் ஐசிசி t20 பௌலர்களுக்கான தரவரிசை பட்டியலில் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய முதல் இடத்தை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அவருடைய ரேட்டிங் 14 புள்ளிகள் உயர்ந்து,தற்போது 747 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதேபோன்று பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அப்ரார் அகமத் 12 இடங்கள் முன்னேறி தற்போது தரவரிசை பட்டியலில் 11வது இடத்தை பிடித்திருக்கின்றார். இதேபோன்று வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் வந்து ஆறாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.
ஆசிய கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார். அதேபோன்று பௌலிங் தரவரிசையிலும் ஹர்திக் பாண்டியா 6 இடங்கள் முன்னேறி 60-வது இடத்தை பிடித்திருக்கின்றார்.
டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார்.ஓமன் அணிக்கு எதிராக 38 ரன்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 74 ரன்கள் அடித்தந்த நிலையில் அவருடைய தரவரிசை பட்டியல் 900 புள்ளிகளை தாண்டி இருக்கிறது. இதன் மூலம் சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் 900 புள்ளிகளை தாண்டிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதற்கு முன்பு சூரியகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோர் இந்த இடத்தை பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் விராட் கோலி, கவாஸ்கர், சூரியகுமார் ஆகியோருக்கு பிறகு 900 புள்ளிகளை தரவரிசையில் கடந்த நான்காவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதேபோன்று திலக் வர்மா, பாகிஸ்தானுக்கு எதிராக 19 பந்துகளில் 30 ரன்கள் அடித்த நிலையில் அவர் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் ஒரு இடம் முன்னேறி தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.