துபாய்:தோனிக்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ள சம்பவம், கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்சில் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியின்போது தோனி, பாரா மிலிட்டரியின் பாலிதன் முத்திரை பதித்த கிளவுசுகளை அணிந்து விளையாடினார். அவரது தேசப்பற்றை பாராட்டி, சமூகவலைத்தளங்களில் தோனி ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்த விவகாரம் ஐசிசியின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக தோனி கிளவுசில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு முதலில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ விளக்கத்தை அளித்தது.
6..6..6..6..6... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் யுவராஜ் சிங்!
இதனிடையே, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆஸி.க்கு எதிரான போட்டியில் தோனி அணிந்த கிளவுசில் அந்த பாலிதன் முத்திரை இல்லை. ஒரு வழியாக அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது என்று கூறலாம். ஆனால்... தோனிக்கு முன்னதாக, கிறிஸ் கெயில் ஒரு முத்திரையை பயன்படுத்த அனுமதி கேட்டு, அதற்கு ஐசிசி மறுத்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
யுனிவர்சல் பாஸ், சிக்சர் மன்னன், அதிரடி ஆட்டக்காரர் என பல பெயர்களில் அழைக்கப் படும் கெயில், தனது பேட்டில் பாஸ் என்ற பெயர் பொறித்த லோகோவை பயன்படுத்த அனுமதி கோரி இருந்தார். ஆனால் ஐசிசி அவர் கோரிக்கையை முற்றாக நிராகரித்துவிட்டது.
அவரது கோரிக்கை ஏற்கப்படாதது குறித்து சற்று கவலை அடைந்த கெயில், பின்னர் சமாதானமாகி விட்டார். அத்தோடு அந்த விவகாரத்தையும் விட்டுவிட்டார். ஐசிசி விதிகளின் படி வீரர்கள் பயன்படுத்தும் பொருட்களில் அரசியல், மதம் மற்றும் இன உணர்வுகள் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.