நவி மும்பை: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, இன்று உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், இரு அணிகளும் தங்களது முதல் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றன.
அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததும், மறுபுறம் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா முன்னேறியதும் இந்த இறுதிப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாடே எதிர்பார்க்கும் இந்த இறுதிப் போட்டிக்கு மழையின் அச்சுறுத்தல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, மழை இறுதிப் போட்டியில் குறுக்கிட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க ஐசிசி வகுத்துள்ள விதிமுறைகள் என்ன என்பதை விரிவாகக் காண்போம்.

போட்டி நடுவர்களின் முதல் மற்றும் முக்கிய நோக்கம், திட்டமிடப்பட்ட நாளான இன்றே (ஞாயிற்றுக்கிழமை) போட்டியை நடத்தி முடிப்பதுதான். மழை காரணமாக ஆட்டம் தாமதமானால், ஓவர்கள் குறைக்கப்பட்டுப் போட்டி நடத்தப்படும். எவ்வளவு நேரம் இழக்கப்படுகிறதோ, அதற்கேற்ப ஓவர்கள் குறைக்கப்பட்டு, எப்படியாவது ஒரு முடிவை எட்டவே முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இன்று மழை காரணமாக ஆட்டத்தை நடத்தவே முடியாத சூழல் ஏற்பட்டால், கவலைப்படத் தேவையில்லை. இதற்காகவே 'ரிசர்வ் டே' (Reserve Day) எனப்படும் மாற்று நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டி நாளை (திங்கட்கிழமை) நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடரும். ஒருவேளை, இன்று ஆட்டம் தொடங்கவே இல்லை என்றால், நாளை முழுமையான 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும்.
ஒரு ஒருநாள் போட்டியின் முடிவை (Result) அறிவிக்க வேண்டுமென்றால், இரு அணிகளும் குறைந்தபட்சம் தலா 20 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில், இந்த 20 ஓவர் விதிமுறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதைவிடக் குறைவாக ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டால், போட்டி ரிசர்வ் டே-க்குச் செல்லும்.
ரிசர்வ் டேயான நாளையும் மழை விடாப்பிடியாகப் பெய்து, 20 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தைக்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அந்தச் சூழலில், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் "இணை சாம்பியன்கள்" (Joint Winners) ஆக அறிவிக்கப்பட்டு, உலகக்கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
ஆகவே, ரசிகர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. வெற்றியாளரைத் தீர்மானிக்க அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வானிலை சாதகமாக அமைந்து, ஒரு முழுமையான விறுவிறுப்பான இறுதிப் போட்டியை காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.