டெல்லி: கிரிக்கெட் தொடர்பான புதிய விதிகளை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கொண்டு வந்துள்ளது. இது, இம்மாதம், 28ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது.
ஆனால், இது இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடக்க உள்ள ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டித் தொடருக்கு பொருந்தாது என, ஐசிசி கூறியுள்ளது.

புதிய விதிகளின்படி, தவறான நடத்தை, வன்முறையில் ஈடுபடும் வீரர்களை மைதானத்தை விட்டு அனுப்பும் அதிகாரம் அம்பயர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பரபரப்பாக இருக்கும், அதே நேரத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி ஆக்ரோஷமாகவும், ஒருவரை ஒருவர் திட்டுவதுமாக பல சமயங்களில் அமைந்துள்ளது.
தற்போது ஐசிசி கொண்டு வந்துள்ள புதிய விதிகள், வரப்போகும் தொடருக்கு பொருந்தாது என்பதால், இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் வாக்குவாதம் நடந்தாலும், வீரர்களை வெளியே அனுப்ப மாட்டார்கள். அதனால், நிறைய பரபரப்பான காட்சிகளை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர், வரும், 17ம் தேதி தொடங்கி, அக்டோபர் 13ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஐசிசி புதிய விதிகள், இந்த மாதம் 28-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. வங்கதேசம் - தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை -பாகிஸ்தான் தொடர்களில் இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துவிடும்.
விதிமுறை மாற்றங்களில் முக்கியமானது, டி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தி எல்.பி.டபுள்யூவுக்கு கேட்கப்படும் அப்பீல், இனி கணக்கில் வராது. அதாவது, எல்.பி.ட.பிள்யு மீதான அப்பீல் தோல்வியடைந்தாலும், ரிவ்யூக்களின் எண்ணிக்கை குறையாது.
டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில், அதாவது 80 ஓவர்களுக்கு பிறகு கேட்கப்படும் ரிவ்யூக்களின் எண்ணிக்கை அதிகரிக்காது.
மைதானத்தில் தவறான நடந்து கொள்ளும்,வன்முறையில் ஈடுபட்டால், வீரர்களை, மைதானத்தை விட்டு வெளியே அனுப்பும் அதிகாரம் அம்பயர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற விதிமீறல்கள் மீது, ஐசிசி விதிகளின் கீழ் முடிவெடுக்கப்படும்.
பால் டிராக்கிங், பேட்டில் பந்து பட்டதற்கான எட்ஜ் டிடக்ஷன் டெக்னாலஜி போன்றவற்றை டிஆர்எஸ் கீழ் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.