சிட்னி: நாளை நடைபெறும் உலக கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன.
சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி, மெல்போர்னில் 29ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடும்.

போட்டி நடக்கவிருக்கும் சிட்னி ஆடுகளம் சுழலுக்கு சாதக மானது. மற்ற ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். ஆனால், சிட்னி சுழலுக்கு ஒத்துழைக்கும். இந்த மைதானத்தை வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்படி மாற்ற வேண்டும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் இந்த ஆடுகளத்தின் பராமரிப்பாளர் டாம் பார்க்கருக்கு வெளிப்படையாகவே கோரி யிருந்தார்.
"டெஸ்ட் போட்டிகளின்போது பார்க்கர் எங்களுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கவில்லை. அரையிறுதிப் போட்டியிலாவது வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற பிட்ச் அமைக்க வேண்டும்" என அவர் கூறியிருக்கிறார்.
மைக்கேல் கிளார்க்கும் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் அமைக்கும் கோரிக்கையை முன் வைத்தாராம். ஆனால், டாம் பார்க்கர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சுழற் பந்து வீச்சை எதிர்கொள்வது உள்ளூர அவர்களைக் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. அதற்காகவே மைதானத்தின் தன்மையை மாற்றும்படி கேப்டன் உட்பட பலரும் வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த நிலையில் சுழற்பந்த்து வீச்சில் சிறந்து விளங்கும் இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளம் உள்ளது என கூறபட்டதால் ஐ.சி.சி யால் அனுப்பபட்ட அதிகாரபூர்வ ஆடுகள இன்ஸ்பெக்டர் ஆடுகளத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தார்.