
21 நாட்கள் ஊரடங்கு
கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

உலககோப்பை போட்டியில் விளையாடியவர்
முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் ஜோகிந்தர் ஷர்மா. சர்வதேச அளவில் 77 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், கடந்த 2007 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் இறுதி ஓவரில் பந்துவீசி பாகிஸ்தான் வீரர் மிஸ்பா -அல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தியவர். ஆனால் எதிர்பார்க்கப் பட்ட அளவிற்கு இவரால் அணியில் சோபிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த 2018ல் இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

கார் விபத்தில் படுகாயம்
உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலிருந்து திரும்பிய பிறகு அவருக்கு இங்கு நிறைய பரிசுகள், பாராட்டுகள் குவிந்தன. இந்திய ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். ஹரியானா அரசும் அவருக்கு நிறைய கவுரவத்தை அளித்தது. இதனால் கிரிக்கெட்டில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2011ல் நடந்த கார் விபத்தில் சிக்கி அவர் காயமடைந்தார். அதன் பின்னர் அவரால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போய் விட்டது.

விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோகிந்தர்
தற்போது ஜோகிந்தர் ஹரியானாவில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் காவல்துறையினர் ஊரடங்கை முறையாக மக்கள் கடைபிடிக்கும்வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், முன்னாள் ஆல்ரவுண்டர் ஜோகிந்தர் ஷர்மாவும், தற்போது டிஎஸ்பியாக தன்னுடைய பணியை முறையாக செய்து வருகிறார்.
டிவிட்டரில் ஐசிசி பாராட்டு
டிஎஸ்பி ஜோகிந்தர் ஷர்மா, கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போரில் தன்னுடைய கடமையை முறையாக செய்து வருகிறார். அவர், முகக்கவசம் அணிந்து, மக்கள்பணியில் ஈடுபட்டு வரும் புகைப்படத்தை ஐசிசி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அவருடைய பணிக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











