டி20 உலககோப்பையில் பிட்ச் மீது சுனில் கவாஸ்கர் சரமாரி புகார்.. ஐ.சி.சி. கவனம் செலுத்த கோரிக்கை!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்த டி20 உலககோப்பை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்று அசத்தியுள்ளது. நியூசிலாந்து நிர்ணயித்த 173 என்னும் சவாலான இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து எட்டி பிடித்தது ஆஸ்திரேலியா.
Recommended Video
எப்போதும் இல்லாத வகையில் இந்த உலகக்கோப்பை மீது கடும் சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது ஆடுகளம் மீது புகார்கள் எழுந்தது. இந்த தொடரில் 2-வது பேட்டிங் செய்த அணி மிக எளிதாக வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் முக்கிய பங்கு
அதாவது இந்த உலககோப்பையில் அணிகள் வெற்றி பெற டாஸ் முக்கிய பங்கு வகித்துள்ளது. மொத்தம் நடந்த 45 போட்டிகளில் 29 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. துபாயில் மட்டும் 10 ஆட்டங்கள் நடந்துள்ளன, இதில் 9 முறை டாஸ் வென்று சேஸிங் செய்த அணியே வென்றுள்ளது. இது தவிர பைனல், செமி பைனலிலும் டாஸ் வென்ற அணியே எளிதாக வெற்றி பெற்றது.

சமமான ஆடுகளம்
டாஸ் வெற்றி பெற்றால் மேட்ச் வெற்றி பெற்று விடலாம் என்ற அளவுக்கு ஆடுகள தன்மை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மிக எளிதாக சேஸ் செய்தபோதே இதற்கான கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் ஐ.சி.சி முக்கியமான தொடர்களில் சமமான ஆடுகளத்தை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கவனிக்கப்பட வேண்டும்
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''இறுதிப் போட்டியிழும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது, இது போட்டி முழுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. பனிப்பொழிவு போன்ற காரணிகள் இலக்கை துரத்தும் அணிகளுக்கு நன்மை அளிக்கிறது. இறுதிப்போட்டியில் பனி அதிக பங்கு வகிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் ஆடுகளதன்மை குறித்து கவனிக்கப்பட வேண்டும்.

மார்ஷ் அசாதாரண இன்னிங்ஸ்
இறுதி போட்டியில் பனி இல்லை என்று கூறினார்கள். ஆனால் முந்தைய ஆட்டங்களில் இது இருந்தது என்று நினைக்கிறேன். . டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கும் சமமான ஆடுகளத்தை சமாளிப்பதற்கும் உறுதி செய்வதற்கும் ஒரு பிரச்சினை இருந்துள்ளது. எனவே அணிகள் இரண்டாவதாக பேட்டிங் செய்ததன் நன்மையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கவனிக்க வேண்டும். மிட்செல் மார்ஷ் ஒரு அசாதாரண இன்னிங்ஸ் ஆடினார் என்று நினைக்கிறேன், டேவிட் வார்னர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுதான் ஆஸ்திரேலியா வெற்றி பெற காரணம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications