மெல்போர்ன்: நடப்பாண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்குகிறது.

முதலில் தகுதி சுற்றும், பிறகு 22ஆம் தேதி பிரதான சுற்று போட்டிகளும் நடைபெறுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
இந்திய அணி வரும் அக். 24ஆம் தேதி தனது முதல் போட்டியை பாகிஸ்தானுடன் மோதுகிறது. இது உலகின் 2வது மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
துபாயில் நடைபெற்ற கடந்த ஆண்டு டி20 உலககோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் இந்திய ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், அதற்கு பழித் தீர்க்கும் விதமாக இந்தியாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வரும் டி20 உலககோப்பையில் இரு அணிகளும் மீண்டும் லீக் சுற்றில் மோதுகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையை ஐ.சி.சி. இன்று தொடங்கியது. விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திலேயே 90 ஆயிரம் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டனர். இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கும் இவ்வளவு அதிக டிக்கெட் குறைந்த நேரத்தில் விற்றது இல்லை.
இதனால், ஐ.சி.சி. நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் போட்டியை தொலைக்காட்சியில் அதிக மக்கள் பார்தத சாதனை உள்ளது. தற்போது டிக்கெட் விற்பனையும் ராக்கெட் வேகத்தில் நடைபெற்றுள்ளது. இன்னும் போட்டி தொடங்க 8 மாதம் உள்ள நிலையில் தற்போதே அதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.