அதிரடி ஆட்டம்
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்டீபன் மற்றும் மேக்ஸ் அதிரடியாக விளையாடி முதல் விககெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. ஸ்டிபன் 37 ரன்களிலும், மேக்ஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் அதன் பிறகு களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
159 ரன்கள் இலக்கு
டாப் குப்பர் 19 பந்தில் 35 ரன்கள் குவிக்க, ஆக்கர்மேன் 26 பந்தில் 41 ரன்கள் விளாசினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே ரன் குவிக்க தடுமாறியது. இத்தனைக்கும் ஆடுகளத்தில் எந்த சிக்கலும் இல்லை.
தடுமாறிய தென்னாப்பிரிக்கா
தொடக்க வீரர் குயீன்டன் டி காக் 13 ரன்களில் வெளியேற, பெவுமா 20 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூசோவ் 25 ரன்களும், மார்க்ரம் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். அணியை காப்பாற்றுவார் என ரசிகர்கள் நம்பி கொண்டிருந்த டேவிட் மில்லர் 17 பந்தில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். பார்னல் டக் அவுட் ஆக, தென்னாப்பிரிக்க அணி 113 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடரை விட்டு வெளியேறியது
இறுதியில் கிளாசென் போராடி 21 ரன்களும், காயத்துடன் விளையாடிய மகாராஜ் 13 ரன்கள் மட்டுமே எடுக்க, தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறியது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தற்போது, பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான போட்டியில் யார் வெல்வார்களோ, அவர்கள் அரையிறுதிக்கு செல்வார்கள்.