ஆன்டிகுவா : டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைஃப் எச்சரித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி முன்னேறியுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்து அணிகளுக்கும் அதிர்ச்சி கொடுத்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றில் பல்வேறு அணிகளுக்கு எமனாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே உலகக்கோப்பை தொடரில் இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி 6வது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி நிறைவு செய்தது. தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைஃப் எச்சரித்துள்ளார்.
முகமது கைஃப் பேசுகையில், ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த ஃபார்மில் உள்ளது. குறிப்பாக பவுலர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஃபரூக்கி, ரஷீத் கான் இருவரையும் சமாளிப்பது எளிதாக இருக்கப் போவதில்லை. அதேபோல் இரு தொடக்க வீரர்களும் உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளனர். குர்பாஸ் மற்றும் ஜத்ரான் இருவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால், உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணி அமெரிக்காவில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அனைத்து போட்டிகளையும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தான் விளையாடுகின்றனர். 2 முதல் 3 வாரங்கள் வரை அங்கேயே இருப்பதால், நிச்சயம் எந்த பிட்சில் எப்படி பேட்டிங், பவுலிங் செய்ய வேண்டும் என்பதை அறிந்துள்ளனர். பிட்சை பற்றி ஒரு முழுமையான புரிதலும், வீரர்களின் ஃபார்ம் குறித்தும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் அவர்களின் பேட்டிங் மட்டும் தான். ஆனால் குர்பாஸ் மட்டும் சிறந்த தொடக்கத்தை கொடுத்துவிட்டால், அவர்களால் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிகிறது. அதேபோல் பவுலிங் மூலம் எந்த அணியையும் வீழ்த்த கூடிய திறமையை கொண்டுள்ளனர். ரஷீத் கானிடம் பேசும் போது, ஃபரூக்கியின் ஸ்விங் குறித்து கேட்டறிந்தேன். அவர் மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பது நன்றாக தெரிவதாக கூறியுள்ளார்.