சென்னை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்டார் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் நேற்று வெளியாகியது. இதில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 11 வீரர்களுக்கான இடங்களில் சீனியர் வீரர்கள் நிரப்பப்பட்டுள்ளனர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும், தமிழக வீரர் நடராஜனும் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் 4 ஸ்பின்னர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மீண்டும் ஸ்டார் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்களையே இந்திய அணிக்கு தேர்வு செய்துள்ளனர்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்த்தால், ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் என்று தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இதில் ஹிட்டர்கள் என்று பார்த்தால் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா மற்றும் பாண்டியா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் பிளாட் பிட்ச்களை கடந்து வேறு எந்த மைதானத்திலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. மறுபக்கம் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து உள்ளூர் போட்டிகளில் கூட ஆடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரின் ஆட்டத்தை பார்த்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஐபிஎல் தொடரிலேயே தரமான பவுலிங் பிட்ச்களில் ரிஷப் பண்ட் பெரியளவில் சோபிக்கவில்லை.
அதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன், சிவம் துபே போன்ற திறமையான வீரர்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற வீரர்கள் இடம்பெற வாய்ப்பில்லை. இதனால் பிசிசிஐ திறமைசாலிகளை காட்டிலும் ஸ்டார் அந்தஸ்து உள்ள வீரர்களை தேர்வு செய்வதிலேயே மும்முரம் காட்டியுள்ளதாக தெரிகிறது.
முதல்முறையாக அமெரிக்காவில் ஐசிசி தொடர் நடப்பதால், ரசிகர்களை ஈர்க்க ஸ்டார் வீரர்கள் தேவையாக உள்ளனர். இதனால் இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற ஸ்டார் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் மிட்சல் மார்ஷ் தலைமையில் அணியை அறிவித்துள்ளன. இதனால் இந்திய ரசிகர்கள் பிசிசிஐ நடவடிக்கையால் புலம்பி வருகின்றனர்.