சென்னை: ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் எட்டாம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இந்த தொடரை இணைந்து நடத்த உள்ளது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐந்து மைதானங்களிலும் இலங்கையில் இரண்டு மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்புவில் இறுதிப் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மற்றும் பாகிஸ்தான் விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 டி20 உலக கோப்பை தொடர் போல் தான் இந்த தொடரில் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளது.
ஒரு பிரிவில் ஐந்து அணிகள் இடம்பெறுகின்றன. ரவுண்டு ராபின் முறைப்படி நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெரும். இந்த தொடரின் நடப்பு சாம்பியன் ஆக இந்தியா விளையாட உள்ளது. 2026 டி20 உலக கோப்பையில் மொத்தம் 55 போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா,அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் ஐந்து இடங்களுக்கான போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பே ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து முடிக்கப்படும். இதேபோன்று மகளிர் பிரிமியர் லீக் தொடர் எப்போதும் பிப்ரவரி மாதம் தான் தொடங்கப்படும். தற்போது டி20 உலக கோப்பை நடைபெறுவதால் அதனை ஜனவரி மாதத்தில் நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடத்தப்படும் என்பதால் மைதானத்தை புனரமைக்கும் பணியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டு வருகிறது.