மும்பை: 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரைச் சேர்க்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வலியுறுத்தியுள்ளார். மும்பையில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள பிசிசிஐ கூட்டத்திற்குப் பிறகு இந்திய அணி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், இந்திய அணி 2025 ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடி, அணியை கட்டமைத்து இருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் மூன்று டி20 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்ததால், பெரும்பாலான தற்போதைய வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, இறுதி அணி அறிவிப்புக்கு முன் ரிங்கு சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் தனது யூடியூப் சேனலில், "சிராஜ் அணிக்கு ஒரு இடம் பெறத் தகுதியானவர். அவர் புதிய மற்றும் பழைய பந்திலும் சிறப்பாகப் பந்துவீசுகிறார், அனுபவமும் கொண்டவர். அவர் ஒரு சொத்தாக இருப்பார்.யார் அவருக்கு வழிவிடுவார்கள் என்பது கேள்வி. ஒருவேளை ஹர்ஷித் ரானாவுக்குப் பதிலாக வரலாம். அணிக்கு இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் அவசரமாகத் தேவைப்பட்டால், வாஷிங்டன் சுந்தர் கூட இடமளிக்கலாம். இது தேர்வாளர்களுக்குப் பெரிய விவாதப் பொருளாக இருக்கும்."
"ரிங்கு பற்றியும் பேச வேண்டும். இவரைப் போன்ற வீரர் பரிசீலிக்கப்பட வேண்டும், ஆனால் அவருக்கு இடம் கொடுக்க யார் வெளியேறுவார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. தற்போது அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் brilliant.கூடுதலாக, 'டிஎஸ்பி சார்' என்ற மற்றொரு வீரரும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார், அவரை ஒரு டெஸ்ட் பந்துவீச்சாளராக மட்டுமே ஆக்கியிருக்கிறார்கள்," என்றும் ஹர்பஜன் கூறினார்.
முகமது சிராஜ், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பிறகு மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், 2025ஆம் ஆண்டில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியம். அவர் 2025 ஐபிஎல் தொடரிலும், சமீபத்திய 2025-26 சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் ஹைதராபாத் அணிக்காகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
ரிங்கு சிங் விஷயத்தில், அவருக்கு குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன. 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு சிறிய கேமியோ வாய்ப்பைப் பெற்ற அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான அணியில் முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்டார்.
"இந்த அணியில் இருந்து யாரும் நீக்கப்பட மாட்டார்கள். எந்த மாற்றமும் நடக்குமென்று நான் பார்க்கவில்லை. இந்த அணி சிறப்பாக விளையாடியுள்ளது, அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இக்குழுவில் வேறு எந்த வீரரும் தற்போது வர முடியாது," என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இறுதியாகத் தெரிவித்தார்.
2026 டி20 உலகக் கோப்பைக்கான ஹர்பஜன் சிங் கணித்த இந்திய அணி : ஷுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர்.