மும்பை: 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வர வங்கதேசம் மறுப்புத் தெரிவித்த நிலையில், தனதுபோட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை ஐசிசியால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வங்கதேசம் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்க மறுத்தால் பாகிஸ்தான் உலகக் கோப்பையைப் புறக்கணிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 அன்று தொடங்கவிருக்கும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, தங்கள் லீக் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஐசிசி வாரியம் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

வங்கதேசத்தின் இந்த நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் உறுதுணையாக இருப்பதாகத் தெரிகிறது. வங்கதேசம் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் போட்டிகளில் கலந்துகொள்ள மறுத்தால், பாகிஸ்தானும் இக்கோப்பைத் தொடரை புறக்கணிக்கலாம் என செய்தி வெளியாகியுன்ளளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. ஆனால், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு வருகின்றன. இது குறித்து பாகிஸ்தான் நிர்வாகிகள் அளித்த பேட்டியில், ”இந்தியா வலியுறுத்தியதால், தங்கள் போட்டிகள் பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு மாற்றப்பட்டது. ஆனால், வங்கதேசத்தின் அதே காரணத்தை ஐசிசி ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, பாகிஸ்தான் கொள்கை ரீதியாக வங்கதேசத்திற்கு ஆதரவளித்தது” என தெரிவித்துள்ளனர்,
போட்டிகளை மாற்றுவது குறித்து விவாதித்த ஐசிசி, "தற்போதைய சூழ்நிலையில் போட்டிகளை இடமாற்றம் செய்வது சிக்கலை ஏற்படுத்தி, ஐசிசியின் நிர்வாகத்தை அது பலவீனப்படுத்தும்" என்று ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐசிசியின் 16 உறுப்பினர்களில் 14 பேர் வங்கதேசத்தின் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் உறுப்பினர்கள் மட்டுமே இடமாற்றக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். முதலில் ஜனவரி 21ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், ஐசிசி ஒரு நாள் நீட்டித்துள்ளது.
இந்த நிலையில், வங்கதேச அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல், தேசிய கிரிக்கெட் வீரர்களை இன்று சந்தித்து இந்த விவகாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவுள்ளார். அத்துடன், அவர் வீரர்களின் கருத்துக்களையும் கேட்கவுள்ளார். பெரும்பாலான வீரர்கள் இந்தியாவுக்குப் பயணிக்க ஆதரவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு வேலை பாகிஸ்தான் வெளியேறுவோம் என மிரட்டினால், ஐசிசிக்கு வேறு வழி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.