மும்பை: ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் எட்டாம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை வியாழக்கிழமை ஆன இன்று மாலை 6:45 மணிக்கு தொடங்கியது. இதற்கான முதல் டிக்கெட்டை நடப்பு சாம்பியன் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரி வழங்கினார்.
அதில், இந்தியா அமெரிக்க அணிகள் மும்பையில் விளையாடும் ஆட்டத்திற்கான டிக்கெட் வழங்கப்பட்டது. இதேபோன்று தென்னாப்பிரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகள் மோது போட்டிக்கான டிக்கெட்டை தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஏய்டன் மார்க்கரம் வழங்கினார்.

பொதுவாக இது போன்ற பெரிய தொடருக்கான டிக்கெட்டின் ஆரம்ப விலையே மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த தொடரை கிரிக்கட் ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப விலையை வெறும் 100 ரூபாய்க்கு ஐசிசி நிர்ணயித்து இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் அண்மையில் இது போன்ற போட்டிகளுக்கு ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் டிக்கெட் விலையும் குறைந்துள்ளது. இந்தத் தொடருக்கான முதல் பகுதி டிக்கெட் மட்டும் தான் தற்போது விற்கப்படுகிறது. இதில் மொத்தம் 20 லட்சம் டிக்கெட் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிப்ரவரி 15ஆம் தேதி,இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் கொழும்புவில் நடைபெற உள்ள ஆட்டத்திற்கான டிக்கெட்டும் விற்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் கொழும்புவில் மோதுகிறது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகள் கொல்கத்தாவிலும், இந்தியா அமெரிக்கா அணிகள் மும்பையிலும் மோத உள்ளது.
கொழும்புவில் நடைபெறும் போட்டிக்கு ஆரம்ப விலையாக 1000 எல்கேஆர் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசி தலைமை செயல் அதிகாரியான சஞ்சய் குப்தா, எங்களுடைய கொள்கை என்பது மிகவும் தெளிவானது. நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, அனைவருக்குமே மைதானத்தில் வந்து பார்க்கக்கூடிய வாய்ப்பை தர வேண்டும்.
இதற்காகத்தான் டிக்கெட் விலையை 100 ரூபாயிலிருந்து ஆரம்பித்து இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். இந்த டிக்கெட்டுகளை Book my show ஆப்பிலும், ஐசிசி இணையதளத்தில் மூலமும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். 20 அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.