மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அடில் ரஷித் மற்றும் ரெஹான் அஹமது ஆகியோருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் பங்கேற்க இந்த பாகிஸ்தான் வம்சாவளி வீரர்கள் இருவரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
விசா தாமதங்கள் காரணமாக, உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கை அணியுடன் இங்கிலாந்து மேற்கொள்ளும் வெள்ளைப்பந்து சுற்றுப்பயணத்தில் அவர்களால் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஷித் மற்றும் ரெஹான் எப்போது அணியுடன் இணைவார்கள் என்பது குறித்து இன்னும் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக, 2024இல் இந்தியா சுற்றுப்பயணத்தின்போது சோயிப் பஷீருக்கும், சாகிப் மஹ்மூதுக்கும் இதேபோன்ற விசா சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும், ரஷித் மற்றும் அஹமதுவின் விண்ணப்பங்கள் மீது இந்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிமொழியைப் பெற்றுள்ளது. தற்போது ரஷித் SA20 போட்டியிலும், அஹமது பிக் பேஷ் லீக்கிலும் விளையாடி வருகின்றனர். பிரிட்டன் அரசாங்கத்துடன் இணைந்து விசா செயல்முறையை விரைவுபடுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த விசா அனுமதி கிடைத்தவுடன், இருவரும் நேரடியாக இலங்கை அல்லது இந்தியாவுக்குப் பயணம் செய்யக்கூடும். உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி C பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், நேபாளம் மற்றும் இத்தாலியுடன் இணைந்துள்ளது. பிப்ரவரி 8 அன்று மும்பையில் நேபாளத்திற்கு எதிராக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது.
இதனிடையே, அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கான், தானும் ஷயான் ஜஹாங்கீர், முகமது மொசின், எஹ்சான் அடில் உட்பட நான்கு பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களுக்கு, இந்தியாவின் டி20 உலகக் கோப்பைக்கான விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அமெரிக்க கிரிக்கெட் வாரிய அதிகாரி இந்தக் கருத்தை மறுத்துள்ளார். அவர், "விசா விவகாரம் அமெரிக்க கிரிக்கெட் அமைப்பால் கையாளப்படுகிறது, இது ஐசிசியால் நடத்தப்படுகிறது. விசா நிராகரிக்கப்பட்டதாக ஒரு வீரர் தவறாக தெரிவித்துவிட்டார்," என்று தெரிவித்துள்ளது.