கொழும்பு : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 15 பேர் கொண்ட இலங்கை அணியில் புதிய கேப்டனாக ஆர்சிபி வீரர் ஹசரங்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஹசரங்கா விளையாடாத நிலையில் தற்போது இலங்கை அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
டி20 உலக கோப்பையில் இலங்கை அணி டி பிரிவில் இருக்கிறது. இலங்கை அணியுடன் வங்கதேசம், நேபால், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் உள்ளது. இதில் இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜூன் மூன்றாம் தேதி நியூயார்க்கில் விளையாடுகிறது.

அதன் பிறகு ஜூன் எட்டாம் தேதி வங்கதேசத்துக்கு எதிராகவும், ஜூன் 12-ஆம் தேதி நேபாலுக்கு எதிராகவும், ஜூன் 17ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிராகவும் இலங்கை அணி விளையாடுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பாதியில் விலகிய பதிரானாவுக்கு இலங்கை அணியிலும் இடம் கிடைத்திருக்கிறது.
இதேபோன்று சமீரா, துஷாரா மற்றும் தில்சன் மதுசங்கா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் இலங்கை அணியில் இடம் பிடித்து இருக்கிறார்கள். இலங்கை அணியின் சீனியர் வீரர்களான மேத்யூஸ், தனஞ்செய்ய டி சில்வா, சனாக்கா ஆகியோருக்கும் இலங்கை டி20 அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

இதேபோன்று இலங்கை அணியின் இளம் அதிரடி வீரர்களான பதூம் நிஷாங்கா,குசல் மெண்டிஸ், கமிண்டு மென்டீஸ், சதிரா சமரவிக்ரமா, அசலங்கா போன்ற வீரர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சாளராக தீக்சனாவும் இடம் பெற்றுள்ளனர்..
அசித்தா பெர்னாண்டோ, விஜயகாந்த், பனுகா ராஜபக்சா, ஜனித் லியங்கா போன்ற வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அணியில் அனுபவமும் இளம் வீரர்களும் கலந்த ஒரு நல்ல அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேக பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் இம்முறை இலங்கை அணி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க வாய்ப்பிருக்கிறது.