மும்பை: டி20 உலக கோப்பை 2026 ஆம் ஆண்டு தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து அணியை அறிவித்தார்.
அப்போது இந்திய அணியின் துணை கேப்டனாக அக்சர் பட்டேல் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கில் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பேட்டிங் ஃபார்ம் காரணம் இல்லை என்றாலும், தற்போது சமீப காலமாக ரன் அடிக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும் அணியின் காம்பினேஷன் காரணமாக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சூரிய குமார் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லையே என்று செய்தியாளர்கள் அவரை நோக்கி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், என்னுடைய பார்மை நினைத்து யாரும் கவலைப்பட தேவையில்லை.
நான் எப்படி செயல்படுகிறேன் என்று எனக்கு தெரியும். எனக்கு ரன்கள் மட்டும் தான் வரவில்லை. நான் வலை பயிற்சியில் நன்றாக தான் விளையாடுகின்றேன். சூரியகுமார் யாதவ் என்ற பேட்டரை நீங்கள் நிச்சயம் டி20 உலக கோப்பைக்கு முன்பே நியூசிலாந்து தொடரில் பார்ப்பீர்கள். இதேபோன்று பேட்டிங் வரிசையிலும் நாங்கள் ஒரு சில மாற்றத்தை செய்திருக்கின்றோம்.
வலது கை, இடது கை காம்பினேஷனை பலரும் விரும்புகிறார்கள். ஆனால் இனி அப்படி முடிவு எடுக்கப் போவதில்லை. திலக் வர்மா நம்பர் மூன்றாவது இடத்தில் விளையாடப் போகிறார், நான் நம்பர் நான்காவது இடத்தில் விளையாட போகிறேன். அதன் பின் சூழலுக்கு ஏற்ப வீரர்கள் வருவார்கள். ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா, ஆறாவது இடத்தில் சிவம் துபே ஆகியோர் விளையாடுவார்கள்.
திலக் வர்மாவுக்கு என்ன பணி என்பதை நாங்கள் தீர்மானிக்க போகின்றோம். அந்தப் பணியையும் அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது நியூசிலாந்து தொடரில் யார் தொடக்க வீரராக களமிறங்குகிறாரோ, அவர்களுக்கு நீண்ட நெடிய வாய்ப்பு நாங்கள் வழங்குவோம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தொடக்க வீரராக வருவதால் கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டருக்கு கீழ் வரிசையில் வாய்ப்பு கிடைக்கும் என்று சூரிய குமார் தெரிவித்துள்ளார்.