ஐசிசி ஆலோசனைக் கூட்டம்
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய செப்டம்பர் மாதம் வரையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி 28ம் தேதி ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஆஸி. கேப்டன்
இந்த ஐசிசி கூட்டத்தில் கொரோனா வைரஸ், டி20 உலக கோப்பை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை நடைபெறுமா இல்லையா என்பது குறித்து இந்த வாரத்தில் முடிவு செய்து ஐசிசி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் தற்போதைய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இயக்குநருமான மார்க் டெய்லர் அறிவுறுத்தியுள்ளார்.
மார்க் டெய்லர் கருத்து
ஐசிசி டி20 உலக கோப்பை குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட்டால் மட்டுமே, அனைத்து தரப்பினரும் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நிர்வாகிகள், இங்கு அமர்ந்துக் கொண்டு நடக்கலாம்.. ஆனால்.. வாய்ப்புண்டு என்பன போன்ற மழுப்பல் பதில்களை கூறுவதில் இருந்து விடுபட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அறிவிப்பிற்காக காத்திருக்கும் பிசிசிஐ
ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுவது சாத்தியமில்லை என்றும் மார்க் டெய்லர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, டி20 உலக கோப்பை குறித்த முறையான அறிவிப்பிற்காக பிசிசிஐயும் காத்திருக்கிறது. டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்தவும் திட்டமிட்டு வருகிறது.