துவங்கியது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்.. பாக்.கிற்கு ஷாக் கொடுத்த ஆப்கன்!
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்கியது.
பிப்ரவரி 3ம் தேதிவரை நடக்க உள்ள இத்தொடரில் நடப்பு சாம்பியன் மேற்கு இந்திய தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி இதுவரை 3 முறை ஜூனியர் உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது. 2 முறை பைனலில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் கேப்டனாக இத்தொடரில் பிரித்வி ஷா செயல்படுகிறார். முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இந்த அணிக்கு பயிற்சியாளராக செயல்படுகிறார்.

முதல் நாள் ஆட்டம்
இன்றைய முதல் நாள் ஆட்டத்தில், வெவ்வேறு மைதானங்களில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே-பப்புவா நியூ கினி, வங்கதேசம்-நமிபியா, நியூசிலாந்து-மேற்கு வங்க தீவுகள் அணிகள் மோதின.

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
இதில் பாகிஸ்தானுக்கு அதிரச்சியளித்து, ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியை தட்டிச் சென்றது. அந்த அணியின் இக்ரம் அலி கில் மற்றும் தார்விஷ் ரசூல் ஆகியோர் 75 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்து வெற்றிக்கு துணை நின்றனர். அஸ்மதுல்லா ஒமர்சாய் மற்றும் குவாயிஸ் அகமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஜிம்பாப்வே வெற்றி
இதேபோல, ஜிம்பாப்வே அணி, பப்புவா நியூ கினி அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. மழையால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 20 ஓவர்களாக நடத்தப்பட்டது.

வங்கதேசம் வெற்றி
வங்கதேசத்தை 191 ரன்களில் மடக்கிய நமிபியாவால் பேட்டிங்கில் அந்த திறமையை காட்டமுடியவில்லை. 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் வங்கதேசம் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி ஆதிக்கம்
இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நியூசிலாந்து-மே.இ.தீவுகள் அணிகள் நடுவேயான போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி,39.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்க்ளை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.


Click it and Unblock the Notifications